தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு “தினத்தந்தி” வழங்கும் கல்வி நிதி கலெக்டர் மலர்விழி நாளை வழங்குகிறார்


தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு “தினத்தந்தி” வழங்கும் கல்வி நிதி கலெக்டர் மலர்விழி நாளை வழங்குகிறார்
x
தினத்தந்தி 5 Dec 2018 11:00 PM GMT (Updated: 5 Dec 2018 11:15 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் 10 பேருக்கு “தினத்தந்தி” கல்வி நிதி வழங்கும் விழா நாளை தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. விழாவில் தர்மபுரி கலெக்டர் எஸ்.மலர்விழி கல்வி நிதியை வழங்குகிறார்.

தர்மபுரி,

கல்விப்பணியில் பல புரட்சிகளை செய்து மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் “தினத்தந்தி” மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கி வந்தது.

2014-2015-ம் கல்வி ஆண்டில் இருந்து இந்த பரிசு திட்டமானது, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் தங்களது படிப்பை தொடரும் வகையில் “தினத்தந்தி” கல்வி நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு 10 மாணவர்கள் வீதம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 340 மாணவ-மாணவிகள் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் பரிசு பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி 2017-2018-ம் கல்வி ஆண்டில் தலா ரூ.10 ஆயிரம் “தினத்தந்தி” கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 10 மாணவ-மாணவிகளின் பெயர் விவரம் வருமாறு:-

1. ஆர்.ஷமீம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாலக்கோடு. 2. கே.எல்.அர்ச்சனா, ஸ்ரீவிநாயகா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பென்னாகரம். 3. ஏ.அய்னிஷியா, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மொரப்பூர். 4. எம்.நந்தினி, அரசு உயர்நிலைப்பள்ளி, கரியப்பனஅள்ளி. 5. ஆர்.அருணாஸ்ரீ, அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி. 6. பி.ஹரிணி, அரசு மேல்நிலைப்பள்ளி, அதிகாரப்பட்டி, தர்மபுரி. 7. வி.திவ்யபிரியா, இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பறையப்பட்டிபுதூர், தர்மபுரி. 8. வி.ராமதாஸ், ஸ்ரீவிநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சில்லாரஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி. 9. எஸ்.பாலாஜி, இ.ஆர்.கே.மேல்நிலைப்பள்ளி, எருமியாம்பட்டி. 10. எஸ்.மோகனபிரியன், அரசு மேல்நிலைப்பள்ளி, லளிகம், தர்மபுரி.

மேற்கண்ட 10 பேர் “தினத்தந்தி” கல்வி நிதிக்கு தேர்வு பெற்று உள்ளனர்.

இந்த 10 மாணவ-மாணவிகளுக்கு “தினத்தந்தி” கல்விநிதி வழங்கும் விழா தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.மலர்விழி தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிதியை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.ராமசாமி வாழ்த்தி பேசுகிறார். மாவட்ட கல்வி அலுவலர் மு.பொன்முடி முன்னிலை வகிக்கிறார். சேலம் “தினத்தந்தி” மேலாளர் டி.ஜெகதீசன் வரவேற்று பேசுகிறார். பள்ளி தலைமை ஆசிரியை கு.தெரசாள் நன்றி கூறுகிறார்.

Next Story