விவசாயத்தை பாதிக்கும் தைல மரங்களை நடக்கூடாது; வனத்துறைக்கு கிராம மக்கள் வலியுறுத்தல்


விவசாயத்தை பாதிக்கும் தைல மரங்களை நடக்கூடாது; வனத்துறைக்கு கிராம மக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Dec 2018 11:15 PM GMT (Updated: 5 Dec 2018 7:21 PM GMT)

மாவட்டத்தில் விவசாயத்தை பாதிக்கும் தைல மரங்களை நடக்கூடாது என்று வனத்துறையை கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிவகங்கை,

கல்லல், கண்ணங்குடி, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய காட்டுப்பகுதிகளில் தைல மரங்கள் வளர்ப்பதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இதனால் காட்டில் வாழ்கிற மான், குரங்கு, பறவைகள் வாழ முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக குரங்குகள் கிராமத்திற்குள் வந்து மக்களுக்கு தொல்லை கொடுக்கிறது.

மயில்கள் விவசாயத்தை சேதப்படுத்துகிறது. இதன் காரணமாக தைல மரங்களை வளர்க்க கூடாது என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள், கிராம மக்கள் வலியுறுத்தினர். இந்த பிரச்சினை தொடர்பாக வனத்துறையினர் கூட்டம் நடத்த கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வனத்துறையினர், கிராம மக்கள், விவசாயிகள் கூட்டம் நடந்தது. இதில் வக்கீல்கள் ராஜ்குமார், கிருஷ்ணன், ராமசாமி, உலகப்பன் மற்றும் கார்த்தி, செல்வமணி, ரோனிகா, திவ்யராஜன், இருதயராஜன், முத்துராமலிங்கம், மோகன், ஆறுமுகம், பாரதி உள்பட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதிகாரிகள் தரப்பில் மாவட்ட வன அதிகாரி ராமேசுவரன், வனத்துறை தாசில்தார் பாலாஜி உள்பட வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தைல மரங்களை வனத்துறையினர் நடுவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே தைல மரங்களை வளர்க்கக் கூடாது. இதற்கு பதிலாக முந்திரி பயிரிடலாம் என்று தெரிவித்தனர். இதே கருத்தை கிராம மக்களும் வலியுறுத்தினர்.

இதில் மாவட்ட வன அதிகாரி கூறியதாவது:-

விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும். இனிவரும் காலங்களில் தைல மரக்கன்றுகள் நடுவதில்லை என்று தெரிவித்தார்.

Next Story