ராமேசுவரத்தில் தாறுமாறாக ஓடி வாகனங்கள் மீது மோதிய அரசு பஸ்


ராமேசுவரத்தில் தாறுமாறாக ஓடி வாகனங்கள் மீது மோதிய அரசு பஸ்
x
தினத்தந்தி 5 Dec 2018 11:00 PM GMT (Updated: 5 Dec 2018 7:58 PM GMT)

ராமேசுவரத்தில் அரசு டவுன் பஸ் பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடி வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் பள்ளிக்குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலமான ராமேசுவரத்துக்கு வெளியூர்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இவ்வாறு ராமேசுவரம் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் அங்கிருந்து ராமேசுவரம் கோவில் மற்றும் நகருக்குள் செல்ல அரசு டவுன் பஸ் அல்லது ஆட்டோக்களில் தான் செல்ல வேண்டும்.

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இருந்து அக்னி தீர்த்த கடற்கரை, மேலவாசல், திட் டக்குடி, சீதா தீர்த்தம் வழியாக டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று காலை அக்னி தீர்த்தக்கடற்கரையில் இருந்து பஸ் நிலையம் நோக்கி அரசு டவுன் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் மேல ரதவீதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென பிரேக் பிடிக்காமல் போனது.

இதனால் அந்த பஸ் தாறுமாறாக ஓடி எதிரே வந்த 2 ஆட்டோக்கள் மற்றும் மோட் டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதி நின்றது. இதில் ஒரு ஆ ட்டோவில் பள்ளிக்குழந்தைகளும், மற்றொரு ஆட்டோவில் பயணிகளும் இருந்தனர். ஆனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். மோட்டார் சைக்கிள் பஸ் சக்கரத்தில் சிக்கி சேதமடைந்தது. அதனை ஓட்டி வந்த ஓலைக்குடா பகுதியை சேர்ந்த கெவிக்குமார் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து அரசு பஸ் போக்குவரத்து கழக டிரைவர் காயாம்புவிடம் போலீசார் விசாரித்து வரு கின்றனர். இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமேசுவரம் பகுதியில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பெரும்பாலான பஸ்களில் தகரங்கள் பெயர்ந்தும், அடிக்கடி பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. மற்ற பகுதிகளில் இயக்கப்பட்டு மிகவும் பழுதடைந்த பஸ்களை கொண்டு வந்து ராமேசுவரத்தில் இயக்குகின்றனர். இதனால் அவை அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்றுவிடுகிறது. இதன் காரணமாக பயணிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

எனவே ராமேசுவரத்தில் பழைய பஸ்களுக்கு பதிலாக அரசு சார்பில் மினி பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story