பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் தாலுகா அலுவலகத்தில் தர்ணா


பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் தாலுகா அலுவலகத்தில் தர்ணா
x
தினத்தந்தி 5 Dec 2018 10:45 PM GMT (Updated: 5 Dec 2018 8:58 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு சரியான கணினி, இணையதள வசதி, மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அதிகாரிகள் தங்களது தாலுகா அலுவலக வளாகத்தில் இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் பெரம்பலூர் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க சார்பில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு சங்க மாவட்ட பொருளாளர் கார்த்தி தலைமை தாங்கினார். இதே போல் வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அதிகாரிகள் தர்ணா பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆன்லைன் மூலம் பட்டா உள்ளிட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் பணியை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லையென்றால் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நாளை (வெள்ளிக்கிழமை) பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டமும், 10-ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனர்.

ஆலத்தூர் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்தில் சங்க மாவட்ட தலைவர் ராஜா, துணை தலைவர் செந்தமிழ்செல்வன், சட்ட ஆலோசகர் நாராயணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேப்பந்தட்டை தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த போராட்டத்திற்கு வட்டார தலைவர் நல்லுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த தர்ணா போராட்டத்தில் வேப்பந்தட்டை வட்டாரத்தில் பணிபுரியும் 30-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Next Story