விவசாயிகள் மண்ணின் தன்மையை தெரிந்து கொண்டால் நல்ல விளைச்சலை பெறலாம் கலெக்டர் பேச்சு


விவசாயிகள் மண்ணின் தன்மையை தெரிந்து கொண்டால் நல்ல விளைச்சலை பெறலாம் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 5 Dec 2018 11:00 PM GMT (Updated: 5 Dec 2018 9:42 PM GMT)

விவசாயிகள் மண்ணின் தன்மையை தெரிந்து கொண்டால் நல்ல விளைச்சலை பெறலாம் என கலெக்டர் அன்பழகன் கூறினார்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலையில் உலக மண் வள தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டு, கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து விவசாயிகளுக்கு மண் வள அட்டைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மனிதனுக்கு உடல்பரிசோதனை எவ்வளவு முக்கியமோ, அதே போல நல்ல பயிர்களை விளைவிக்க நிலத்தின் மண் பரிசோதனை மிகவும் முக்கியமானதாகும். விவசாயிகள் அனைவரும் தங்கள் விளைநிலத்தின் மண்ணின் தன்மையை தெரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் சாகுபடி மேற்கொண்டால் நல்ல விளைச்சலை பெற முடியும். வேளாண் துறையின் சார்பாக விவசாயிகளின் விளைநிலத்தில் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண் வளம் குறித்த தகவல்கள் அடங்கிய அட்டைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தில் மண் மாதிரிகள் வலைச்சட்ட முறையில் மானாவாரி நிலங்களில் 10 எக்டேருக்கு ஒரு மண் மாதிரியும், நன்செய் நிலங்களில் 2.5 எக்டேருக்கு ஒரு மண் மாதிரியும் ஆய்வுக்காக சேகரிக்கப்படும். மண் மாதிரி சேகரிக்கப்பட்ட இடத்தின் அட்ச தீர்க்க ரேகை சேகரிக்கப்பட்டு குறிப்பிட்ட வலைச்சட்டத்திற்குள் அனைத்து விவசாயிகளுக்கும் மண் மாதிரி முடிவறிக்கை வழங்கப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் 2018-19 ம் ஆண்டில் 10,363 மண் மாதிரிகள் சேகரிக்கப்ட்டு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது வரை 7,817 மண்வள அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மண்வள அட்டைகள் பிப்ரவரி 2019-க்குள் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இம்மண்வள அட்டையிலுள்ளபடி விவசாயம் செய்தால் அதிக மகசூலை பெற முடியும். மேலும், சிறிய அளவிலான தொகையை பயிர் காப்பீட்டுக்காக செலுத்தி இயற்கை பேரிடர், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் மூலம் பெரிய இழப்பீடுகளை தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வேளாண் இணை இயக்குனர் ஜெயந்தி, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் லியாகத், வேளாண் உதவி இயக்குனர் பாண்டி, வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி திரவியம், தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஜெயபாஸ்கர், துணை இயக்குனர் கந்தசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கலா மற்றும் முன்னோடி விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story