அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி: இந்து முன்னணியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - 94 பேர் கைது


அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி: இந்து முன்னணியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் - 94 பேர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2018 10:15 PM GMT (Updated: 6 Dec 2018 5:40 PM GMT)

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 94 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தியும், இதற்கு ஏதுவாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றக்கோரியும் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி நேற்று காலை இந்து முன்னணியினர் விழுப்புரம் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் அருகில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் ராமு, சிவசுப்பிரமணியன், நகர தலைவர் தரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர செயலாளர்கள் வெங்கடேசன், தேசிங்கு, மாவட்ட துணைத்தலைவர் அனந்தபாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் விஷ்ணு, இளங்கோ உள்பட பலர் கலந்துகொண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மருது உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 94 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story