பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து முடிக்கக்கோரி; கருப்பு சட்டை அணிந்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து முடிக்கக்கோரி; கருப்பு சட்டை அணிந்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:15 PM GMT (Updated: 6 Dec 2018 5:55 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து முடிக்கக்கோரி விழுப்புரத்தில் முஸ்லிம்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சையத்உஸ்மான் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஜூனைது, தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் குலாம்மொய்தீன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் பள்ளிவாசலை கட்டிக்கொடுக்க வேண்டும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் என சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ள குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும், பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜான்பாஷா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட பொருளாளர் அப்பாஸ், முன்னாள் மாவட்ட வணிகர் அணி பொருளாளர் அப்துல்ஹக்கீம், நகர தலைவர் அப்பாஸ், பொருளாளர் அஷ்ரப்அலி, துணைத்தலைவர்கள் ராவுத்தர், பாஷா, மாவட்ட துணைத்தலைவர் அலாவுதீன் உள்பட ஏராளமான முஸ்லிம்கள் கருப்பு சட்டை அணிந்தவாறு கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் ஜாகிர்உசேன் நன்றி கூறினார்.

இதேபோல் விழுப்புரம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் முஸ்லிம்கள் கருப்பு சட்டை அணிந்தபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதற்கு மாவட்ட தலைவர் அப்துல்கரீம் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் அக்பர்அலி வரவேற்றார். வக்கீல் அணி செயலாளர் ராஜா முகம்மது, மாநில பேச்சாளர் ஷாஜி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமதுரபீக், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் தாஜிதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல்மாலிக், பொருளாளர் யாசின், துணைத்தலைவர் மாலிக்தீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story