சங்கரன்கோவில் அருகே தம்பதியை அரிவாளால் வெட்டிய கொள்ளையர்கள் தங்கம் என நினைத்து கவரிங் நகையை பறித்துச்சென்றனர்


சங்கரன்கோவில் அருகே தம்பதியை அரிவாளால் வெட்டிய கொள்ளையர்கள் தங்கம் என நினைத்து கவரிங் நகையை பறித்துச்சென்றனர்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:00 PM GMT (Updated: 6 Dec 2018 6:49 PM GMT)

சங்கரன்கோவில் அருகே தம்பதியை அரிவாளால் வெட்டிய கொள்ளையர்கள் தங்க நகை என்று நினைத்து கவரிங் நகையை பறித்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவில் அருகே தம்பதியை அரிவாளால் வெட்டிய கொள்ளையர்கள் தங்க நகை என்று நினைத்து கவரிங் நகையை பறித்துச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரிசி ஆலை உரிமையாளர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 48), அரிசி ஆலை உரிமையாளர். இவர் நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம் புத்தநேரியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தனது மனைவி வனிதாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தெற்கு மலையடிப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் கொள்ளையர்கள் 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென பிரபாகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை முந்திச் சென்று மறித்தனர். இதனால் கணவன்-மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அரிவாள் வெட்டு

பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய கொள்ளையர்கள் அரிவாளை காட்டி மிரட்டி, வனிதா கழுத்தில் அணிந்திருந்த நகையை கழற்றி தருமாறு கூறினார்கள். நகையை தரவில்லை என்றால் வெட்டி விடுவதாக மிரட்டினர்.

இதனால் பயந்து போன வனிதா தான் அணிந்திருந்த நகையை கழற்றி கொடுத்தார். ஆனால் அவர் கொடுத்த நகை கவரிங் நகை என்று தெரியாமல் கொள்ளையர்கள் வாங்கி வைத்துக் கொண்டனர். மேலும் அவர்கள், வனிதா அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி தருமாறு கேட்டனர். ஆனால் அவர் அணிந்து இருந்தது தங்க மோதிரம் என்பதால் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் திடீரென வனிதா, பிரபாகரன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

அப்போது, அந்த வழியாக அரசு பஸ் ஒன்று வந்தது. இதை பார்த்த கொள்ளையர்கள் உடனே அங்கிருந்து தங்களது மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். வெட்டுக்காயம் அடைந்த 2 பேரையும் பஸ்சில் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை அரிவாளால் வெட்டிய கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story