ரூ.440 கோடியில் சாலைகள் சீரமைப்பு மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் பேட்டி


ரூ.440 கோடியில் சாலைகள் சீரமைப்பு மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மாநகராட்சி கமிஷனர் பேட்டி
x
தினத்தந்தி 6 Dec 2018 10:15 PM GMT (Updated: 6 Dec 2018 8:40 PM GMT)

ரூ.440 கோடியில் சாலைகள் சீரமைக்கப்படும் என்றும், இனிவரும் காலங்களில் சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், ரிப்பன் மாளிகையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மழைநீர் தேங்காது

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 3 மாதங்களில் 1,494 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் ரூ.20 கோடி செலவில் தூர்வாரப்பட்டு உள்ளது. உலக வங்கி நிதி உதவியுடன் கூவம், அடையாறு பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 95 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சாலை அமைக்கும் பணிக்கு ரூ.440 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்குள் (டிசம்பர்) பழுதடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும். இனிவரும் காலங்களில் சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மாநகராட்சி எடுத்துள்ளது.

பொது கழிப்பிடங்கள்

மேலும் வருகிற ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் தடையை நடைமுறைப்படுத்த பல்வேறு சங்கங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. குப்பை அள்ளப்படுவது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. குப்பை முறையாக அள்ளப்படவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மெரினா கடற்கரையில் கடைகள் ஆங்காங்கே இருந்ததால் குப்பைகள் சிதறி கிடந்தது. அதை சரி செய்யும் வகையில் மெரினாவில் உள்ள கடைகள் அனைத்தும் இரண்டு வரிசையாக அமைக் கப்பட்டுள்ளது. பொது கழிப்பிடங்கள் ஓரிரு மாதங்களில் தரம் உயர்த்தப்படும். பொது கழிப்பிடங்கள் நவீன கழிப்பறையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கண்காணிப்பு கேமரா

விதிமீறல் செய்து கட்டிடங்களை கட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்டிமுடிக்கப்பட்ட பின் தடையில்லா சான்று வாங்கிய பின்னரே குடிநீர், மின் இணைப்பு வழங்கப்படும். பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் நிர்பயா திட்டத்துக்கு மாநகராட்சி எடுத்த நடவடிக்கை காரணமாக ரூ.425 கோடி பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் போலீசார் உதவியோடு கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் அமைப்பது கூடிய விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story