நாக்பூரில் இணையதள விளையாட்டு; சிறுமி தற்கொலை


நாக்பூரில் இணையதள விளையாட்டு; சிறுமி தற்கொலை
x
தினத்தந்தி 6 Dec 2018 11:00 PM GMT (Updated: 6 Dec 2018 10:54 PM GMT)

இணையதள விளையாட்டுக்கு அடிமையான சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நாக் பூரில் நடந்துள்ளது.

நாக்பூர். 

இணையதள விளையாட்டுக்கு அடிமையான சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நாக் பூரில் நடந்துள்ளது.

உயிரை பறிக்கும் விளையாட்டுகள்

விஞ்ஞான உலகில் இணையதள வசதி ஏராளமான நன்மைகளை அள்ளித்தருகிறது. அதை தவறாக பயன் படுத்தினால் உயிருக்கு எமனாக மாறி விடும் என்பதையும் மறுக்க முடியாது. குறிப்பாக இணையதள விளையாட்டுகள் இளம் தலைமுறையினரின் உயிரை பறித்து வருவது சமீப காலமாக தொடர் கதையாகி வருகிறது.

இந்த இணையதள விளையாட்டு, சிறுமி ஒருவரின் உயிரை பறித்த சோக சம்பவம் மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்துள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

75 சதவீத மதிப்பெண் எடுத்த மாணவி

நாக்பூர், நரேந்திர நபர் பகுதியை சேர்ந்தவர் மானசி (வயது 17). அவர் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 75 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

இருப்பினும் அவருக்கு விருப்பப்பட்ட கல்லூரியில் படிக்க இடம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஒரு ஆண்டு கழித்து தான் விரும்பிய கல்லூரியில் படிக்க முடிவு செய்தார். வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு தனது செல்ல பிராணிகளும், செல்போனும் மட்டுமே துணையாக இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அவர் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கையில் குறிப்பு

அப்போது தற்கொலை செய்துகொண்ட மானசியின் கையில் “வெளியேற இந்த இடத்தில் வெட்டவேண்டும்” என்ற குறிப்பை எழுதி இருந்தார்.

அவர் நீலதிமிங்கலம், மோமோ போன்ற உயிரை கொல்லும் இணையதள விளையாட்டுகளை விளையாடி வந்தது தெரியவந்தது. அதற்கு அடிமையாகி இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

Next Story