டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி கலெக்டர் தகவல்


டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Dec 2018 11:32 PM GMT (Updated: 6 Dec 2018 11:32 PM GMT)

டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- மாவட்டத்திலுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று பயன்பெறும் வகையில், தன்னார்வ பயிலும் வட்டம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் ஆகியவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த மையத்தின் மூலமாக மத்திய, மாநில அரசு தேர்வாணையங்களால் நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி.போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு போட்டித் தேர்வுகளுக்கும் தயார் செய்ய ஏதுவாக புத்தகங்கள், மாதாந்திர மற்றும் தினசரி பத்திரிகைகள் அடங்கிய நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு செய்துள்ள 55 செயல் அலுவலர் காலிப்பணியிடங்களுக்கும், 65 செயல் அலுவலர் காலிப்பணியிடங்களுக்கும் மற்றும் கூட்டுறவுத்துறையில் காலியாகவுள்ள 30 பணியிடங்களுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெறவுள்ளது.

பயிற்சி வகுப்புகளின் போது பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு மேற்காணும் தேர்வு எழுத விண்ணப்பம் செய்துள்ள மனுதாரர்கள் அலுவலக வேலை நாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து, இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story