தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்களுக்கு “தினத்தந்தி”யின் கல்வி நிதி கலெக்டர் மலர்விழி வழங்கினார்


தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்களுக்கு “தினத்தந்தி”யின் கல்வி நிதி கலெக்டர் மலர்விழி வழங்கினார்
x
தினத்தந்தி 7 Dec 2018 11:00 PM GMT (Updated: 7 Dec 2018 6:37 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவ, மாணவிகள் 10 பேருக்கு “தினத்தந்தி”யின் கல்வி நிதியை தர்மபுரி மாவட்ட கலெக்டர் எஸ்.மலர்விழி வழங்கினார்.

தர்மபுரி,

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களை ஊக்குவித்து, அவர்கள் மேல் படிப்பை தொடர்வதற்கு “தினத்தந்தி” கல்வி நிதி திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு 10 மாணவ-மாணவிகளை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2017-2018-ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய மாணவர்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பேர் என மொத்தம் 34 மாவட்டங்களில் (புதுச்சேரி உள்பட) இருந்து 340 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.34 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய தலா ரூ.10 ஆயிரம் “தினத்தந்தி” கல்வி நிதி பெற தகுதி பெற்ற 10 மாணவ-மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:-

1. ஆர்.ஷமீம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாலக்கோடு. 2. கே.எல். அர்ச்சனா, ஸ்ரீ விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம். 3. ஏ.அய்னிஷியா, கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மொரப்பூர். 4. எம்.நந்தினி, அரசு உயர்நிலைப்பள்ளி, கரியப்பனஅள்ளி. 5. ஆர்.அருணாஸ்ரீ, அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி. 6. பி.ஹரிணி, அரசு மேல்நிலைப்பள்ளி, அதிகாரப்பட்டி, தர்மபுரி. 7. வி.திவ்யபிரியா, இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பறையப்பட்டிபுதூர், தர்மபுரி. 8. வி.ராமதாஸ், ஸ்ரீ விநாயகா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சில்லாரஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி. 9. எஸ்.பாலாஜி, இ.ஆர்.கே.மேல்நிலைப்பள்ளி, எருமியாம்பட்டி. 10. எஸ்.மோகனபிரியன், அரசு மேல்நிலைப்பள்ளி, லளிகம், தர்மபுரி.

இந்த 10 மாணவ-மாணவிகளுக்கு “தினத்தந்தி” கல்வி நிதி வழங்கும் விழா தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடந்தது. விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் எஸ்.மலர்விழி தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு கல்வி நிதியை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“தினத்தந்தி”யின் சார்பில் இன்றைய தினம் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்” என்ற குறள்படி இந்த விழாவில் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவ, மாணவிகளுடன் வந்த அவர்களின் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சியை மாணவிகளாகிய நீங்கள் அனைவரும் பார்த்தீர்கள்.

இதை போல தலை சிறந்த மாணவ, மாணவிகளை சிறந்த நாளிதழான “தினத்தந்தி” தேர்வு செய்து அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது சந்தோஷமாகும். வரும் ஆண்டுகளில் மாணவ, மாணவிகள் இதே போல உதவித்தொகை, பரிசுகளை பெற்று ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை பெற்று தரவேண்டும். பள்ளி என்பது கல்வி கற்க கூடிய கல்வி சாலை மட்டுமல்ல. எதிர்காலத்தை உருவாக்க கூடியது. பள்ளிகள் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகிறது.

ஆசிரியர்கள் உங்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், குருவாகவும் விளங்குகிறார்கள். முன்பெல்லாம் கூட்டுகுடும்பமாக வாழ்ந்த காலத்தில் மாணவ, மாணவிகள் பல்வேறு சூழல்களை அனுசரித்து வாழ்ந்து வரும் நிலை இருந்தது. காலப்போக்கில் கூட்டுகுடும்பம் என்ற நிலை மாறி பெற்றோர், குழந்தைகள் என்று தனியாக வாழும் நிலை இருக்கிறது. இதனால் பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்கு தேவையற்ற பொருட்களை எல்லாம் வாங்கி கொடுக்கிறார்கள்.

இதனால் தோல்வி என்றால் என்ன என்றே தெரியாமல் பல குழந்தைகள் வளர்கிறார்கள். மாணவிகளாகிய உங்களுக்கு எதிர்காலத்தில் பதவி உயர்வுகளை உங்களின் பெற்றோர் வாங்கி தரமுடியாது. அதனால் வெற்றியாளர்களாக நீங்கள் உருவாக உங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். சமூகத்தில் எந்தவித சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் மாணவ-மாணவிகள் தயாராக வேண்டும். எளிதாக எதுவும் கிடைக்காது. இதை மாணவ, மாணவிகள் அனைவரும் உணர வேண்டும்.

கோழிக்குஞ்சு கூட போராடி தான் முட்டையில் இருந்து வெளியே வருகிறது. எனவே ஆறறிவு படைத்த மனிதன் சவால்களை நிறைய சந்திக்க வேண்டும். அவ்வாறு சந்தித்தால்தான் வெற்றியாளராக உருவாக முடியும். டாக்டர், என்ஜினீயர் மட்டுமே ஆவது வாழ்க்கை அல்ல. போட்டித்தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று அதிகாரிகளாக வரலாம். சுய தொழில்கள் ஈட்டி கூட அதிக வருவாய் பெற முடியும்.

ஆகவே எதிர்காலத்தில் நாம் என்ன ஆக வேண்டும் என்பதில் மாணவ, மாணவிகள் தெளிவாக இருக்க வேண்டும். நீட் தேர்வு எழுதினால் மருத்துவ படிப்பில் சேர்ந்து டாக்டர் ஆக முடியும். அதனால் நீட் தேர்வை எதிர்கொள்ளும் அளவிற்கு உங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். பயிற்சியும், முயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம். பெற்றோர்கள் தங்களுடைய ஆசைகளை குழந்தைகள் மீது திணிக்க கூடாது. உங்களின் குழந்தைகள் என்ன ஆக விரும்புகிறார்கள் என அறிந்து அதற்கு நீங்கள் உதவ வேண்டும். பள்ளியில் படிக்க கூடிய மாணவ-மாணவிகளுக்கு நல்ல நட்பு அவசியம் தேவை.

“தினத்தந்தி” சார்பில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் ரூ.34 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்குவது மிகவும் பாராட்டுக்குரிய ஒன்றாகும். நன்றாக படிக்கிறோம், ஆனால் பொருளாதார சூழ்நிலை காரணமாக எங்களால் மேற்படிப்பு படிக்க முடியவில்லை என்று மாணவ-மாணவிகள் யாரும் கவலைப்பட வேண்டாம். வசதி இல்லை என எண்ணாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்தால் உதவிகள் கிடைக்கும். வெற்றி பெற்றால் வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

இவ்வாறு கலெக்டர் எஸ்.மலர்விழி கூறினார்.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.ராமசாமி பேசும்போது, “தினத்தந்தி” மாணவ, மாணவிகளின் கல்விக்கு தேவையான தகவல்களை வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் வினா-விடை புத்தகம் வழங்கி வருகிறது. இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்வதற்கு தேவையான தகவல்களை “தினத்தந்தி” வழங்கி வருகிறது. மாணவ, மாணவிகள் அன்றாடம் நாளிதழ் படிக்கும் வழக்கத்தை உருவாக்கி கொள்ள வேண்டும். பாடப்புத்தகம் உங்களின் மதிப்பெண் உயர வழிவகுக்கும். நூல்கள், செய்திதாள்கள் உங்களின் அறிவை வளர்க்க வழிவகுக்கும். எனவே தினமும் நாளிதழ் படிக்கும் வழக்கத்தை உருவாக்கி கொள்ளுங்கள் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மு.பொன்முடி முன்னிலை வகித்தார். முன்னதாக “தினத்தந்தி” சேலம் கிளை மேலாளர் டி.ஜெகதீசன் வரவேற்றார். விழாவில் தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.பாரதிதாசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மு.ஜனார்த்தனன், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ஆர்.மணி, எருமியாம்பட்டி இ.ஆர்.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தீத்துமாலை, பறையப்பட்டிபுதூர் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செம்முனி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை வி.புனிதா தொகுத்து வழங்கினார். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியை கு.தெரசாள் நன்றி கூறினார்.

Next Story