தாம்பரத்தில் மர்ம காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் மாணவர் பலி பிறந்த நாளில் உயிர் பிரிந்த சோகம்


தாம்பரத்தில் மர்ம காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் மாணவர் பலி பிறந்த நாளில் உயிர் பிரிந்த சோகம்
x
தினத்தந்தி 7 Dec 2018 11:00 PM GMT (Updated: 7 Dec 2018 6:43 PM GMT)

தனது பிறந்த நாளன்று உயிர் பிரிந்த சோகம், மர்ம காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.

தாம்பரம்,

கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ணாபுரம், கம்பர் தெருவை சேர்ந்தவர் ரங்கா சரவணன் (வயது 22). வண்டலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கு 4 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவருக்கு காய்ச்சல் குணம் அடையவில்லை. எனவே அவர் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் அவருக்கு மர்மக்காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ரங்கா சரவணன் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு ரங்கா சரவணன் பரிதாபமாக இறந்தார். நேற்றுமுன்தினம் ரங்கா சரவணனுக்கு பிறந்தநாள் என தெரிகிறது.

காய்ச்சலால் பிறந்த நாளில் அவர் உயிர் இழந்த சம்பவம் அவரின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story