கோத்தகிரி அருகே: தேயிலை தோட்டங்களில் உலா வரும் சிறுத்தைப்புலி - தொழிலாளர்கள் பீதி


கோத்தகிரி அருகே: தேயிலை தோட்டங்களில் உலா வரும் சிறுத்தைப்புலி - தொழிலாளர்கள் பீதி
x
தினத்தந்தி 7 Dec 2018 10:15 PM GMT (Updated: 7 Dec 2018 6:46 PM GMT)

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டங்களில் உலா வரும் சிறுத்தைப்புலியால், தொழிலாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானை, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தைப்புலி, கரடி, உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்படுவதால், அவை திசை மாறி அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன.

இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு, உயிரிழப்புகள் நிகழ்வது வழக்கமாகி வருகிறது. வனத்துறையில் போதுமான ஊழியர்கள் இல்லாத காரணத்தால், குடியிருப்பு பகுதியில் புகும் வனவிலங்குகளை கண்காணித்து விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோத்தகிரியில் இருந்து அளக்கரை செல்லும் சாலையில் உள்ள காமராஜ் நகர், புதூர், சேலாடா உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வருகிறது. குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாய்களையும், கால்நடைகளையும் சிறுத்தைப்புலி வேட்டையாடி வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காமராஜர் நகரில் நள்ளிரவில் புகுந்து 5 வளர்ப்பு நாய்களை சிறுத்தைப்புலி கவ்வி சென்றுள்ளது. மேலும் கடந்த மாதம் 26-ம் தேதி புதூர் பகுதிக்குள் புகுந்து பாஸ்கரன் என்பவரது ஆட்டை அடித்து கொன்றுள்ளது. அதற்கு மறுநாள் பகல் நேரத்திலேயே அங்குள்ள தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி உலா வந்தது. இதை பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு தங்களது குடியிருப்புகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதிய வேளையில் அளக்கரை செல்லும் சாலையோரத்தில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் சில்வர் ஓக் மரத்தின் மீது சிறுத்தைப்புலி ஒன்று ஏறி நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த தொழிலாளர்கள் பீதி அடைந்து, பணிக்கு செல்லாமல் திரும்பினர். பகல் நேரத்திலேயே தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி உலா வருவதால், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும் மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இதுகுறித்து தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-

தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியால் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் இருந்து வருகிறோம். எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இதனால் பணிக்கு செல்ல முடியவில்லை. எனவே அந்த சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணிப்பதோடு, அதனை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story