மகள் காதல் திருமணம் செய்ததால் வி‌ஷம் குடித்து தந்தை தற்கொலை


மகள் காதல் திருமணம் செய்ததால் வி‌ஷம் குடித்து தந்தை தற்கொலை
x
தினத்தந்தி 7 Dec 2018 9:30 PM GMT (Updated: 7 Dec 2018 7:33 PM GMT)

மொடக்குறிச்சி அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் வி‌ஷம் குடித்து தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

மொடக்குறிச்சி,

மொடக்குறிச்சி கந்தசாமிபாளையம் அருகே உள்ள குமாரயிவலசுவை சேர்ந்தவர் சங்கரன் (வயது 49). தொழிலாளி. இவருக்கு சந்தோஷ் (21) என்ற மகனும், மோகனபிரியா (22) என்ற மகளும் உள்ளனர். இதில் மோகனப்பிரியா ஈரோட்டில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 4–ந் தேதி மோகனப்பிரியா திடீரென வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மோகனப்பிரியா, தனது தந்தையை போனில் தொடர்பு கொண்டு, ‘கடையில் வேலை பார்த்த ஒருவரை காதலித்தேன். அவரையே திருமணம் செய்து கொண்டேன்.’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இதை கேட்டு சங்கரன் அதிர்ச்சி அடைந்தார். சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே மனவேதனையுடன் காணப்பட்டு வந்தார்.

சம்பவத்தன்று அவர் தனது மனைவியிடம், நான் வாவிக்காவலசுவுக்கு வேலைக்கு சென்றுவிட்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து மனைவியை போனில் தொடர்பு கொண்டு, ‘நான் வாவிக்காவலசுவில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வி‌ஷம் குடித்த நிலையில் இருக்கிறேன்’ என்று கூறினார்.

இதனால் அவருடைய மனைவி பதறியடித்துக்கொண்டு அங்கு சென்றார். அங்கு, மயங்கி கிடந்த சங்கரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி சங்கரன் நேற்று முன்தினம் இறந்தார்.

இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story