கோவையில் கார் திருட்டு கும்பல் கைது


கோவையில் கார் திருட்டு கும்பல் கைது
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 8 Dec 2018 12:38 AM GMT)

கோவையில் கார் திருட்டு கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கார்கள் மீட்கப்பட்டது.

கோவை,

கோவை பீளமேடு, ராமநாதபுரம் உள்பட பல்வேறு இடங்களில் கார்கள் திருட்டு போனது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிப்பதற்காக பீளமேடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இப்ராகிம் பாதுஷா, உபால்டு ராஜ், ராதாகிருஷ்ணன், ஏட்டு துரைக்கண்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். கார் திருட்டு கும்பல் தொடர்பாக கோவை, சேலம், ஈரோடு பகுதிகளில் உள்ள முன்னாள் குற்றவாளிகள் உள்பட பலரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.

நேற்று காலை கோவை தொட்டிப்பாளையம் பிரிவு டாஸ்மாக் கடை அருகில் தனிப்படையினர் வாகன சோதனை நடத்தினார்கள். அந்த வழியாக சென்ற ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, காரை ஓட்டி வந்தவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர். போலீசார் ஜீப்பில் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் கார் திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் விவரம் வருமாறு:- 1.சங்கர் (வயது 37), ஜவஹர் மில் பின்புறம், சேலம். 2. நெல்சன் (30), சவுரிபாளையம், கோவை. 3. மதுரைவீரன் (29), திருப்புவனை, சிவகங்கை மாவட்டம். அவர்கள் வந்த கார் கடந்த மாதம் 16-ந்தேதி கோவை உடையாம்பாளையத்தில் திருடியது என்று விசாரணையில் தெரியவந்தது. அந்த கார் மீட்கப்பட்டது.

அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 3 சொகுசு கார்களும் மீட்கப்பட்டன. கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டனர்.


Next Story