மேகதாதுவில் அணை கட்டப்பட உள்ள இடத்தில் மந்திரி டி.கே.சிவக்குமார் நேரில் ஆய்வு சட்டத்திற்கு உட்பட்டு கர்நாடகம் அணை கட்டுவதாக பேட்டி


மேகதாதுவில் அணை கட்டப்பட உள்ள இடத்தில் மந்திரி டி.கே.சிவக்குமார் நேரில் ஆய்வு சட்டத்திற்கு உட்பட்டு கர்நாடகம் அணை கட்டுவதாக பேட்டி
x
தினத்தந்தி 7 Dec 2018 11:30 PM GMT (Updated: 7 Dec 2018 9:33 PM GMT)

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

மேகதாதுவில் அணை

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் மேகதாது என்ற இடம் உள்ளது. “ஆடு தாண்டும் காவிரி” என்று குறிப்பிடும் அளவுக்கு இங்கு காவிரி ஆறு குறுகி ஓடுகிறது. இந்த இடம் கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு முதல் கட்ட அனுமதியை வழங்கியுள்ளது.

இந்த அணை திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையொட்டி தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது.

மந்திரி நேரில் ஆய்வு

இதன் ஒரு பகுதியாக கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று மேகதாதுவில் புதிய அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

போக்குவரத்துத்துறை மந்திரி டி.சி.தம்மண்ணா, டி.கே.சுரேஷ் எம்.பி., நீர்ப்பாசனத்துறை முதன்மை செயலாளர் ராகேஷ்சிங், கர்நாடக மின்சார வாரிய நிர்வாக இயக்குனர் பொன்னுராஜ், நீர்ப்பாசன வாரிய நிர்வாக இயக்குனர் பிரசன்னா, நீர்ப்பாசனத்துறை ஆலோசகர் வெங்கட்ராமன், வனத்துறை அதிகாரி சுதீப் சூலே மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அடையாள குறியீடு

அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ள இடத்தை எளிதில் அடையாளம் காணும் வகையில் ஒரு கொடி நடப்பட்டு இருந்தது. மேலும் அந்த இடத்தில் உள்ள பாறை மீது வெள்ளை நிற பெயிண்டால் அடையாள குறியீடு குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பணிகள் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கு பிறகு டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்ே்பாது அவர் கூறியதாவது:-

மேகதாதுவில் புதிய அணை கட்டப்படும் இடத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் இன்று(அதாவது நேற்று) நேரில் ஆய்வு செய்தோம். அதிக மழை பெய்யும் காலங்களில் நீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது. நடப்பு ஆண்டில் தமிழகத்திற்கு 395 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் திறந்துவிடப்பட்டது. இதில் 150 டி.எம்.சி. நீர் கடலில் கலந்துள்ளது. இந்த உபரி நீரை பயன்படுத்தும் நோக்கத்தில் ரூ.5,912 ேகாடியில் மேகதாதுவில் புதிய அணை கட்ட அரசு முடிவு செய்துள்ளது.

சட்டத்துக்கு உட்பட்டு...

அணை கட்டுவதற்காக கர்நாடக மின்சார வாரியம் சார்பில் ரூ.2,000 கோடியும், நீர்ப்பாசனத்துறை சார்பில் ரூ.3,912 கோடியும் நிதி வழங்கப்படும். சட்டத்திற்கு உட்பட்டு தான் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுகிறது.

இந்த திட்டத்தில் பெங்களூருவுக்கு குடிநீர் மற்றும் 440 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும். இந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாது. அணை கட்டும்போது சுமார் 5 ஆயிரம் எக்டேர் நிலம் நீரில் மூழ்கும். நீரில் மூழ்கும் நிலப்பரப்பில் மாநில அரசுக்கு சொந்தமான நிலம் 95 சதவீதமும், தனியார் நிலம் 5 சதவீதமாகவும் இருக்்கும். 4 கிராமங்களும் நீரில் மூழ்கும். இந்த திட்டத்திற்காக விவசாயிகள் தங்களின் நிலத்தை வழங்க முன்வந்துள்ளனர்.

தமிழக அரசு வாபஸ் பெறும்

இந்த திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகம் ஏன் தீர்மானம் நிறைவேற்றியது என்று எனக்கு புரியவில்லை?. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கை தமிழக அரசு வாபஸ் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

நேரில் சந்திக்க நேரம் ஒதுக்க கோரி தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். நேரம் ஒதுக்கினால் இந்த திட்டம் குறித்து விளக்கி கூறுவேன். ஒருவேளை தமிழக குழுவினர் இங்கு வந்தால், தேவையான விவரங்களை வழங்கவும் தயாராக உள்ளோம்.

67 டி.எம்.சி. நீர் தேக்கலாம்

எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இந்த புதிய அணையில் 67 டி.எம்.சி. நீர் தேக்கி வைக்கலாம்.

அதில் இருந்து 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த அணையில் சேகரிக்கப்படும் நீர், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புப்படி தமிழகத்திற்கு மாதந்தோறும் திறந்துவிடப்படும்.

சுப்ரீம் கோர்ட்டு

காவிரி நடுவர் மன்றம், தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. நீரை ஒதுக்கி தீர்ப்பு கூறியது. சுப்ரீம் கோர்ட்டு அதை மாற்றி, 177.25 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதன்படி தமிழகத்திற்கு நீர் வழங்கப்படும். தமிழ்நாடு பிலுகுண்டுவில் தண்ணீர் அளவீடும் மையம் உள்ளது. எனவே நாங்கள் குறைவான அளவு தண்ணீர் வழங்குவோம் என தமிழ்நாடு பயப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு முதல் கட்ட அனுமதியை வழங்கியுள்ளது.

சுற்றுலா தலம்

அணை கட்டப்படும்போது மேகதாதுவை சுற்றுலா தலமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கிய பிறகு அணை கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு டி.கே. சிவக்குமார் கூறினார்.

Next Story