திருச்சி கோட்ட: ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருச்சி கோட்ட: ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2018 10:00 PM GMT (Updated: 7 Dec 2018 11:36 PM GMT)

திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி,

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் அருகே யார்டில் நேற்று எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் பிரபு தலைமை தாங்கினார். தொழிற்சங்கத்தின் துணை பொதுச்செயலாளரும், கோட்ட செயலாளருமான வீரசேகரன் கோரிக்கைகள் குறித்து பேசினார். திருச்சி ஜங்ஷன் யார்டில் கூடுதலாக 11 குளிர்சாதன வசதி ரெயில் பெட்டிகளை பராமரிக்க ஒதுக்கிய பின்பும் அதற்கான பணியிடங்கள் ஏற்படுத்தாதது, விழுப்புரம் யார்டில் ரெயில் பெட்டிகள் பராமரிப்புக்கு கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படாதது, திருச்சி யார்டில் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யாதது, பதவி உயர்வை தாமதப்படுத்துவது ஆகியவற்றுக்காக திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கிளை தலைவர்கள் சோமசுந்தரம், வேல்குமார் உள்பட தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், யார்டு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ரெயில்வே நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் ரெயில்வே அதிகாரிகளை கண்டித்தும் கோஷமிட்டனர். யார்டில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து திருச்சிக்கு நேற்று வந்த தெற்கு ரெயில்வே தலைமை அதிகாரிகளிடம் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் முறையிட்டனர். 

Next Story