ராயக்கோட்டை அருகே விவசாய பயிர்களை நாசம் செய்த 17 யானைகள்


ராயக்கோட்டை அருகே விவசாய பயிர்களை நாசம் செய்த 17 யானைகள்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:45 PM GMT (Updated: 8 Dec 2018 8:11 PM GMT)

ராயக்கோட்டை அருகே விவசாய பயிர்களை 17 யானைகள் நாசம் செய்தன.

ராயக்கோட்டை,

ராயக்கோட்டை அருகே உள்ளது ஊடேதுர்க்கம் ஊராட்சி. இதற்கு உட்பட்டது கூத்தனப்பள்ளி. இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் சித்தன், ரவிச்சந்திரன், மதியழகன். விவசாயிகள். இவர்கள் வாழைத்தோட்டம் வைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஊடேதுர்க்கம் காட்டில் இருந்து 7 யானைகள் அந்த பகுதிக்கு வந்தன. இதே போல தேன்கனிக்கோட்டை காட்டில் இருந்து 10 யானைகளும் அங்கு வந்தன. இந்த 17 யானைகளும், விவசாயிகள் 3 பேரின் வாழைத்தோட்டங்களை கால்களால் மிதித்து சேதப்படுத்தியது.

இதே போல நாகமங்கலத்தில் விவசாயி முனியப்பன் என்பவரின் ராகி, தென்னை பயிர்களையும், அதே ஊரைச் சேர்ந்த திம்மராயன் என்ற விவசாயிக்கு சொந்தமான வாழை, தென்னை தோட்டங்களையும் யானைகள் நாசப்படுத்தின. இதே போல யு.குருபரப்பள்ளியில் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயிக்கு சொந்தமான கரும்பு தோட்டத்தையும் யானைகள் நாசப்படுத்தின. இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். யானைகளின் நடமாட்டம் குறித்து ஓசூர் வனச்சரகர் சீதாராமன் கூறியதாவது:-

ஊடேதுர்க்கம் காட்டையொட்டி இரவு நேரத்தில் யாரும் செல்ல வேண்டாம். மேலும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக அங்கு கொண்டு செல்ல வேண்டாம். அதே போல இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் யாரும் காவலுக்கு இருக்க வேண்டாம். யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story