தென்பெண்ணை ஆற்றில் இருந்து கம்மநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் போராட்டம்


தென்பெண்ணை ஆற்றில் இருந்து கம்மநாயக்கன் ஏரிக்கு தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:30 PM GMT (Updated: 8 Dec 2018 8:15 PM GMT)

தென்பெண்ணை ஆற்றில் இருந்து கம்ம நாயக்கன் ஏரிக்கு தண்ணீர் விட வலியுறுத்தி ஏரியில் நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளது வஜ்ஜிரபள்ளம் கிராமத்தில் உள்ள கம்மநாயக்கன் ஏரியின் மூலம் வஜ்ஜிரபள்ளம் போடம்பட்டி, எல்லப்பன் கொட்டாய், பாலிகானூர், காளான்கொட்டாய் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினரும், சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாத காரணத்தால் ஏரிக்கு நீர் வரத்து இல்லாமல் வறண்டு போனதால், குடிநீருக்கே கடும் சிரமம் அடைந்து வருவதாக வேதனையுடன் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இதற்கிடையே தென்பெண்ணை ஆற்றில் இருந்து கால்வாய் மூலம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று வஜ்ஜிரபள்ளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் வறண்ட ஏரியில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள அழியாளம் அணைக்கட்டில் இருந்து தூள்செட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் முடிந்து, திட்ட மதிப்பீடு தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கம்மநாயக்கன் ஏரியை இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், இணைக்கப்படவில்லை. எங்களது வாழ்வாதாரத்தை காக்க ஏரிக்கு கால்வாய் அமைத்து தண்ணீர் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story