சாலையை கடக்க முயன்ற பெண் பஸ் மோதி பலி மகளுக்கு சடங்கு நடக்க இருந்த நிலையில் சோகம்


சாலையை கடக்க முயன்ற பெண் பஸ் மோதி பலி மகளுக்கு சடங்கு நடக்க இருந்த நிலையில் சோகம்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:45 PM GMT (Updated: 8 Dec 2018 8:39 PM GMT)

காசிம்புதுப்பேட்டையில் மகளுக்கு சடங்கு நடக்க இருந்த நிலையில் சாலையை கடக்க முயன்ற தாய் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள காசிம்புதுப்பேட்டை காதர்முகைதீன் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அப்ரோஸ் பேகம் (வயது 28). இவர் நேற்று அருகில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பி வருவதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து பரமக்குடி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அப்ரோஸ் பேகம் மீது மோதியதுடன், உடலில் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்ரோஸ் பேகம் மகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சடங்கு நிகழ்ச்சி நடக்க இருந்தது. அதனால் அவரது வீட்டிற்கு வெளியூர்களில் இருந்தும் உறவினர்கள் வந்திருந்தனர். விபத்து நடந்த இடத்தில் அவரது உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர மணியன், அப்ரோஸ் பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story