மடிகேரி அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு குளிக்க சென்றபோது பரிதாபம்


மடிகேரி அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு குளிக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 8 Dec 2018 11:00 PM GMT (Updated: 8 Dec 2018 9:09 PM GMT)

மடிகேரி அருேக குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இவர்கள் குளத்தில் குளிக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

குடகு, 

மடிகேரி அருேக குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர். இவர்கள் குளத்தில் குளிக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

2 மாணவர்கள் சாவு

குடகு மாவட்டம் மடிகேரி பகுதியை சேர்ந்தவர்கள் யஸ்வந்த் (வயது 20), ரக்‌ஷித்(20). நண்பர்களான இவர்கள் 2 பேரும் அந்தப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு திரும்பினர். அப்போது அவர்கள் கூட்டுவாலே பகுதியில் உள்ள குளத்தில் நீச்சல் அடித்து குளிக்க சென்றனர்.

அவர்கள் 2 பேரும் குளத்தில் நீச்சல் அடித்து குளித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அந்தப்பகுதியில் யாரும் இல்லாததால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டனர்.

தீயணைப்பு படையினர் வரவழைப்பு

இந்த நிலையில் கல்லூரி முடிந்து நீண்ட நேரமாகியும் அவர்கள் 2 பேரும் வீட்டுக்கு திரும்பி வராததால், அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர் 2 பேரையும் பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கூட்டுவாலே பகுதியில் உள்ள குளத்தில் கரையில் அவர்கள் 2 பேரின் துணிகளும், கல்லூரி பைகளும் இருந்தன. இதனால் அவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகித்தனர்.

இதுதொடர்பாக மடிகேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.

2 உடல்கள் மீட்பு

தீயணைப்பு படையினர் குளத்தில் இறங்கி சோதனை செய்தனர். அப்போது, 2 பேரின் உடல்களும் குளத்தில் கிடப்பது தெரியவந்தது. அதன்பின்னர் தீயணைப்பு படையினர் 2 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 2 பேரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மடிகேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரி முடிந்ததும் அவர்கள் 2 பேரும் குளத்தில் நீச்சல் அடித்து குளித்தபோது தண்ணீரில் மூழ்கி உயரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மடிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story