சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 30 பவுன் நகையுடன் பயணியின் கைப்பை மாயம்


சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 30 பவுன் நகையுடன் பயணியின் கைப்பை மாயம்
x
தினத்தந்தி 8 Dec 2018 9:20 PM GMT (Updated: 8 Dec 2018 9:20 PM GMT)

சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 30 பவுன் நகையுடன் பயணியின் கைப்பை மாயமானது.

சென்னை, 

சென்னை ராயபுரத்தை சேர்ந்தவர் நூர்தீன் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இந்த நிலையில் கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று முன்தினம் சேரன் ரெயிலில் நூர்தீன் குடும்பத்தினருடன் சென்னைக்கு வந்தார்.

சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்ததும், தனது குடும்பத்தினருடன் இறங்கி வீட்டுக்கு சென்றார். அப்போது தான் தனது மனைவியின் கைப்பையை ரெயிலில் மறந்து விட்டு வந்தது நூர்தீனுக்கு தெரியவந்தது. இதையடுத்து சென்டிரல் ரெயில் நிலையம் சென்று சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தான் பயணம் செய்த பெட்டி முழுவதும் தேடிப்பார்த்தார். ஆனால் கைப்பை கிடைக்கவில்லை

இதையடுத்து நூர்தீன், சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் தனது மனைவி கைப்பையை மறந்து விட்டு சென்றதாகவும், அதில் ரூ.4½ லட்சம் மதிப்புள்ள 30 பவுன் நகை இருந்ததும், இப்போது அந்த கைப்பையை காணவில்லை என்றும் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story