சேத்துப்பட்டு அருகே மின்சார ரெயில் மோதி பெண் பலி பேத்தி படுகாயம்


சேத்துப்பட்டு அருகே மின்சார ரெயில் மோதி பெண் பலி பேத்தி படுகாயம்
x
தினத்தந்தி 8 Dec 2018 10:30 PM GMT (Updated: 8 Dec 2018 9:27 PM GMT)

சேத்துப்பட்டு அருகே மின்சார ரெயில் மோதி பெண் பலியனார். அவரது பேத்தி படுகாயம் அடைந்தார்.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி அமுதா(வயது 65). இவர் நேற்று தனது பேத்தி ஹர்ஷவர்தினியுடன் சேத்துப்பட்டில் உள்ள பால் வியாபாரியை பார்க்க சென்றார். பின்னர் பால் வியாபாரியிடம் அமுதா பால் வாங்கியதற்காக கொடுக்கவேண்டிய தொகையை கொடுத்துவிட்டு சேத்துப்பட்டு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை மார்க்கமாக சென்ற மின்சார ரெயில் அமுதா மற்றும் அவரது பேத்தி ஹர்ஷவர்தினியின் மீது மோதியது. இதில் அமுதா சம்பவ இடத்திலேயே பலியானார். ஹர்ஷவர்தினி படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு புகார் கொடுத்தனர்.

விரைந்து வந்த எழும்பூர் ரெயில்வே போலீசார் சிறுமி ஹர்ஷவர்தினியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அமுதாவின் உடலையும் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த அமுதா கீழ்ப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் மோகனவள்ளியின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது,

Next Story