கே.சி.வேலி திட்டத்தின் கீழ் கோலார் மாவட்டத்தில் 200 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப முடிவு மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பேச்சு


கே.சி.வேலி திட்டத்தின் கீழ் கோலார் மாவட்டத்தில் 200 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப முடிவு மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பேச்சு
x
தினத்தந்தி 8 Dec 2018 10:45 PM GMT (Updated: 8 Dec 2018 9:31 PM GMT)

கே.சி.வேலி திட்டத்தின் கீழ் கோலார் மாவட்டத்தில் 200 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.

கோலார் தங்கவயல்,

கே.சி.வேலி திட்டத்தின் கீழ் கோலார் மாவட்டத்தில் 200 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.

கே.சி.வேலி திட்டம்

பெங்களூருவில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரித்து கோலார் மாவட்டத்தில் உள்ள 126 ஏரிகளுக்கு நிரப்புவதற்காக ஏற்படுத்தப்பட்டது கே.சி.வேலி(கோரமங்களா-செல்லகட்டா) திட்டம். இந்த திட்டம் ரூ.1,500 கோடி செலவில் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் கோலார் தாலுகா நரசாப்பூர் அருகே உள்ள லட்சுமிசாகர் ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்ணீர் நிரப்பப்பட்டது.

நீரேற்றும் நிலையம் திறப்பு

இந்த நிலையில் லட்சுமிசாகர் ஏரியில் இருந்து மற்ற ஏரிகளுக்கு நீர் அனுப்புவதற்காக, லட்சுமிசாகர் ஏரியின் அருகே நீரேற்றும் நிலையமும் அமைக்கப்பட்டது. அந்த நீரேற்றும் நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட நி்ாவாகம் சார்பில் நடந்த விழாவில் கோலார் மாவட்ட பொறுப்பு மந்திரியும், கர்நாடக பஞ்சாயத்து ராஜ் மந்திரியுமான கிருஷ்ண பைரேகவுடா, சபாநாயகர் ரமேஷ் குமார், கோலார் தொகுதி எம்.பி. கே.எச்.முனியப்பா, எம்.எல்.ஏ.க்கள் நாராயணசாமி(பங்காருபேட்டை), சீனிவாசகவுடா(கோலார்), நஞ்சேகவுடா(மாலூர்) மாவட்ட கலெக்டர் மஞ்சுநாத் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி நீரேற்றும் நிலையத்தை தொடங்கி வைத்தார்கள்.

இதன்பின்னர் புதிய நீரேற்றும் நிலையத்தில் இருந்து கோலார் தாலுகாவில் உள்ள 5 ஏரிகளுக்கும், பங்காருபேட்டை, மாலூர் தாலுகாக்களில் உள்ள 59 ஏரிகளுக்கும் ராட்சத குழாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

200 ஏரிகளுக்கு....

இந்த நிகழ்ச்சியில் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பேசும் போது கூறியதாவது:-

கே.சி.வேலி திட்டம் பொதுமக்களின் ஆதரவுடன் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை சிலர் காழ்ப்புணர்ச்சியுடன் பார்க்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் கோலார் மாவட்டத்தில் உள்ள 126 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப திட்டமிடப்பட்டது. வரும் காலங்களில் 200 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது என்றார்.

சபாநாயகர் ரமேஷ்குமார் பேசுகையில், கே.சி.வேலி திட்டத்தை தொடங்க நிறைய பேர் முயற்சி செய்தோம். ஆனால் ஒரு சிலர் இதனை எதிர்க்கிறார்கள். எத்தினஒலே திட்டத்தையும் சிலர் எதிர்த்து வருகிறார்கள். வீரனையும், விவசாயியையும் எதிர்ப்பவர்கள் அடையாளம் தெரியாமல் போய் விடுவார்கள்.

கே.சி.வேலி திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றார்.

போராட்டம்

கோலார் தொகுதி எம்.பி. கே.எச்.முனியப்பா பேசும் போது கூறியதாவது:-

இந்த திட்டம் மிக சிறப்பானது. கோலார் ஏற்கனவே வறட்சி பாதித்த மாவட்டமாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உள்ள இந்த திட்டத்தை யாரும் குறைசொல்ல கூடாது என்றார்.

முன்னதாக இந்த விழா தொடங்கும் முன்பு மாவட்ட பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்களுக்கு மாவட்ட கலெக்டர் உரிய மரியாதை அளிப்பது இல்லை என்று கூறி மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், உறுப்பினர்களும் விழா நடந்த இடத்தின் அருகே போராட்டம் நடத்தினர்.

பரபரப்பு

அவர்களிடம் கலெக்டர் மஞ்சுநாத், போலீஸ் சூப்பிரண்டு ரோகிணி கடோச் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது ேதால்வியில் முடிந்தது. பின்னர் அங்கு சென்ற கே.எச்.முனியப்பா எம்.பி. போராட்டம் நடத்தியவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து விழா நடந்த இடத்திற்கு அழைத்து வந்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.

Next Story