திருவள்ளூர் மாவட்டத்தில் 2 பெண்களிடம் நகை பறிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் 2 பெண்களிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 8 Dec 2018 9:48 PM GMT (Updated: 8 Dec 2018 9:48 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத் தில் 2 பெண்களிடம் நகை பறிக்கப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மனைவி ஜான்சிராணி (வயது 47). சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை ஜான்சிராணி திருவள்ளூருக்கு வந்து தன்னுடைய தாயாரை அழைத்து செல்வதற்காக திருவள்ளூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜான்சிராணி அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

இது குறித்து ஜான்சிராணி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு பெண்ணிடம்

அதே போல திருவள்ளூரை அடுத்த புட்லூர் ராமாபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். ரெயில்வே ஊழியர். இவரது மனைவி தனலட்சுமி (45). இவர் நேற்று காலை வழக்கம் போல தன்னுடைய வீட்டின் வெளியே வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் தனலட்சுமியிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்தனர்.

பின்னர் அவர்கள் அக்கம்பக்கத்தில் யாரும் இல்லாததை உறுதி செய்து கொண்டு தனலட்சுமி அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து தனலட்சுமி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story