திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் 1,455 வழக்குகளுக்கு தீர்வு


திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் 1,455 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 8 Dec 2018 10:30 PM GMT (Updated: 8 Dec 2018 9:52 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் லோக் அதாலத்தில் 1,455 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாற்றுமுறை தீர்வு மையத்தில் நேற்று திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் லோக்அதாலத் நடைபெற்றது. இதனை மாவட்ட கூடுதல் நீதிபதி தீப்தி அறிவுநிதி, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் பிச்சம்மாள் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்கள்.

மோட்டார் வாகன விபத்து சிறப்பு மாவட்ட நீதிபதி முகமதுபரூக், மாவட்ட நீதிபதிகள் சுஜாதா, தமிழ்ச்செல்வி, சுபாஷினி, செந்தில்குமார், சரஸ்வதி, முகிழாம்பிகை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதே போல பொன்னேரி, பூந்தமல்லி, அம்பத்தூர், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு , ஊத்துக்கோட்டை, திருத்தணி பகுதிகளிலும் லோக்அதாலத் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த லோக்அதாலத்தில் நீதிமன்றங்களில் நிலுவை மற்றும் நிலுவையில் அல்லாத குற்றவியல் சமாதான வழக்குகள், காசோலை வழக்குகள், வங்கி வழக்குகள், குடும்பநல வழக்குகள், சிவில் வழக்குகள், நிலஆர்ஜித வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் என மொத்தம் 7 ஆயிரத்து 122 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

1,455 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.31 கோடியே 42 லட்சத்து 20 ஆயிரத்து 606-க்கு தீர்வு காணப்பட்டது. முடிவில் முதுநிலை நிர்வாக உதவியாளர் கே.எஸ்.ரவிக்குமார் நன்றி கூறினார்.

Next Story