காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 2½ லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 2½ லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2018 9:59 PM GMT (Updated: 8 Dec 2018 9:59 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 800 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை, சிறுகாவேரிபாக்கம் வட்டாரம், காஞ்சீபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் மெட்ராஸ் பெட்டிலைசர்ஸ் லிமிடெட் இணைந்து நடத்திய உலக மண்வள தின விழா காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் காஞ்சீபுரத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-

விவசாயம் மண்வளத்தை சார்ந்ததாகும். மண்ணில் இயற்கையாக உள்ள சத்துக்களை பயன்படுத்தி அதற்கேற்ப மரபுகளை பின்பற்றி விவசாயம் நடைபெற்று வந்தது. தற்போது மண்வளத்தில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதை விரிவான முறையில் பரிசோதனை செய்து மண் வளத்தில் இல்லாத தேவையான சத்துகளை உரம் இட்டு எந்த விதை பயிர்களை விளைவித்தால் அதிக உற்பத்தியை பெற முடியும் என்பதற்கு மண் வள அட்டை மிக முக்கியமானதாகும்.

மண் வள பரிசோதனை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மண்வள அட்டை வழங்க வேண்டிய 3 லட்சத்து 30 ஆயிரம் எண்ணிக்கையில் கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சத்து 47 ஆயிரத்து 808 விவசாயிகளுக்கு மண் வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்குள் மீதமுள்ள 82 ஆயிரத்து 192 விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.

நாம் நம்முடைய உடலை உரிய பரிசோதனைகள் செய்து ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்வது போல் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து மண் வள அட்டைகளில் பரிந்துரை செய்யப்படும் உரங்களை மட்டும் இட்டு விவசாய உற்பத்தியை பெருக்கி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.

இயற்கை உரம்

மேலும் விவசாயிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பம்மல், அனகாபுத்தூர் பேரூராட்சிகளில் இயற்கை உரம் அதிக அளவில் உள்ளது. அதனை விவசாயிகள் விவசாயத்துறை அலுவலர்களோடு தொடர்பு கொண்டு பெறும் வழிமுறையினை அறிந்து தேவையான அளவு உரத்தை இலவசமாக பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொது) கோல்டிபிரேமாவதி, சென்னை வேளாண்மை இயக்குனரக வேளாண்மை உதவி இயக்குனர் முரளிதரன், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் வேல்முருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லதாபானுமதி, வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சோமு, வேளாண்மை துணை இயக்குனர்கள் கே.முருகன், கரோலின் உள்பட வேளாண்மைத்துறை அதிகாரிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Next Story