திருச்சி அருகே ஓடும் வேன் தீப்பிடித்து எரிந்தது


திருச்சி அருகே ஓடும் வேன் தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 10 Dec 2018 11:00 PM GMT (Updated: 10 Dec 2018 7:34 PM GMT)

திருச்சி அருகே ஓடும் வேன் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

கொள்ளிடம் டோல்கேட்,

திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள நொச்சியம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 43). இவர் சொந்தமாக வேன் வைத்துள்ளார். நேற்று காலையில் சிவக்குமார் வீட்டில் இருந்து வேனில் புறப்பட்டு திருச்சியை நோக்கி வந்து கொண்டிருந்தார். வேனை அவரே ஓட்டி வந்தார். வேனில் வேறு யாரும் இல்லை.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெ.1 டோல்கேட் ஒய்ரோடு அருகில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது, வேனின் முன்புறத்தில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதனையடுத்து சிவக்குமார் என்னவென்று பார்ப்பதற்காக வேனை நிறுத்தி கீழே இறங்கினார். இந்த நிலையில் வேனின் முன்பகுதி தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மண்ணை போட்டு தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

இதனால் பயந்துபோன அவர் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். எனினும் வேன் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் வேனில் இருந்த எலக்ட்ரிக்கல் வயரில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓடும் வேன் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story