அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை பொதுமக்கள் தொட வேண்டாம் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்


அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை பொதுமக்கள் தொட வேண்டாம் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 11 Dec 2018 11:00 PM GMT (Updated: 11 Dec 2018 7:33 PM GMT)

அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை பொதுமக்கள் தொட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறி வுறுத்தி உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயல் மீட்பு பணிகள் முன்னேற்றம் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். கலெக்டர் கணேஷ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக குடிசை, ஓட்டு வீடுகளுக்கு உண்டான நிவாரண நிதி ரூ.56 கோடி மாவட்ட கருவூலத்திற்கு வரபெற்று, பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுமட்டுமல்லாமல் ரூ.69 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் முதற்கட்டமாக வரப்பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கும் நிவாரண தொகை முதற்கட்டமாக ரூ.57 லட்சம் வரப்பெற்றதுடன், மேலும் ரூ.2 கோடி வர உள்ளது. வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சார இணைப்பு முழுவதுமாக இன்னும் ஓரிரு நாளில் வழங்கப்பட்டு விடும். புதுக்கோட்டை மாவட்ட பணியாளர்கள் அல்லாது வெளி மாநிலம், மாவட்டத்தில் இருந்து தற்போது 1,500 பணியாளர்கள் மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பகல் நேரத்தில் பணி நடைபெறும் இடங்களில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

குறிப்பாக அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை பொதுமக்கள் தொடவேண்டாம். மேலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களிடம் இவ்வித விழிப்புணர்வை ஆசிரியர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர மகளிர் சுய உதவிக்குழுக்கள், 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் மின்சார பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story