பாபநாசம் அருகே குடும்ப தகராறில் பெண் அடித்துக்கொலை அண்ணன்-அண்ணி உள்பட 4 பேர் கைது


பாபநாசம் அருகே குடும்ப தகராறில் பெண் அடித்துக்கொலை அண்ணன்-அண்ணி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2018 11:15 PM GMT (Updated: 11 Dec 2018 8:11 PM GMT)

பாபநாசம் அருகே குடும்ப தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன், அண்ணி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை பார்வதிபுரம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மனைவி எலிசபெத் ராணி(வயது 51). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அதே தெருவில் எலிசபெத் ராணியின் அண்ணன் மைக்கேல்தாஸ்(55) குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவருடைய மகளை எலிசபெத்ராணியின் மகன்கள் யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை என தெரிகிறது. இதனால் எலிசபெத்ராணி குடும்பத்துக்கும், அவருடைய அண்ணன் மைக்கேல்தாஸ் குடும்பத்துக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி மைக்கேல்தாஸ் அவருடைய மனைவி ஜெயமேரி(45), 17 வயது மகன் மற்றும் மகள்கள் ஜாய்ஸ்மேரி (25), கில்ட்டாமேரி (26) ஆகிய 5 பேரும் சேர்ந்து எலிசபெத்ராணியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் படுகாயம் அடைந்த எலிசபெத்ராணி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து எலிசபெத்ராணியின் மகன் செல்வமணி பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைக்கேல்தாஸ், ஜெயமேரி, இவர்களின் 17 வயது மகன் மற்றும் மகள் ஜாய்ஸ்மேரி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார், பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு ராஜசேகர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கில்டாமேரியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story