குடிநீர் வடிகால் வாரிய டெண்டரில் ஒப்பந்ததாரர்கள் இடையே மோதல் நாமக்கல்லில் பரபரப்பு


குடிநீர் வடிகால் வாரிய டெண்டரில் ஒப்பந்ததாரர்கள் இடையே மோதல் நாமக்கல்லில் பரபரப்பு
x
தினத்தந்தி 12 Dec 2018 9:15 PM GMT (Updated: 12 Dec 2018 7:36 PM GMT)

குடிநீர் வடிகால் வாரிய டெண்டரில் ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல், 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கிராம குடிநீர் திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் அலுவலகம் நாமக்கல்லில் உள்ள பரமத்தி சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் சார்பில் மேல்நிலை நீர்தேக்கதொட்டி கட்டுதல், குழாய் பதித்தல் உள்ளிட்ட 11 பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதற் காக கடந்த 6-ந் தேதி முதல் ஒப்பந்த படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இதற்கான ஒப்பந்த புள்ளிகளை பெறுவதற்கு நேற்று கடைசிநாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்த படிவங்களை பூர்த்திசெய்து, அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் போட்டு வந்தனர்.

நேற்று காலை 10 மணியளவில் சேலத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் கிருஷ்ணன் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை பெட்டியில் போடுவதற்கு வந்தார். அப்போது நாமக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் சிலர் அவர் பூர்த்தி செய்த படிவங்களை போடவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஒப்பந்ததாரர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதல் முற்றியதில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஒப்பந்ததாரர் கிருஷ்ணன் கூறியதாவது:-

நான் குடிநீர் வடிகால் வாரியத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஒப்பந்ததாரராக இருந்து வருகிறேன். இங்கு நடைபெறும் டெண்டரில் 3 பணிகளுக்கு ஒப்பந்த படிவங்களை பூர்த்திசெய்து போடவந்தேன். ஆனால் உள்ளூர் ஒப்பந்ததாரர்கள் சிலர் என்னை போடவிடாமல் தடுத்து விட்டனர். மேலும் எனது மகன் அண்ணாதுரையையும் தாக்க முயன்றனர். ஒப்பந்த புள்ளிகள் போடும் பெட்டியையும் உடைத்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, மொத்தம் உள்ள 11 பணிகளில் 4 பணிகள் சேலத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கப்பட இருப்பதாக கூறினர்.

இந்த சம்பவம் நேற்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கிராம குடிநீர் திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story