கட்டாய திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு


கட்டாய திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
x
தினத்தந்தி 12 Dec 2018 10:15 PM GMT (Updated: 12 Dec 2018 9:14 PM GMT)

கட்டாய திருமணத்துக்கு வற்புறுத்தியதால் நாகர்கோவில் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுதொடர்பாக வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை கக்கன்புதூரை சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மனைவி கவிதா(வயது 39). இவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர். தற்போது, மகள்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இதில் 2-வது மகள், நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்துக்கொண்டிருந்தபோது, கக்கன்புதூரை சேர்ந்த வசந்தராஜன்(21) என்ற வாலிபர், எனது மகளை பின்தொடர்ந்து வந்து காதலிப்பதாக கூறியுள்ளார். மேலும், எனது மகளையும் காதலிக்கும்படி வற்புறுத்தினார். எனது மகள் வீட்டுக்கு வந்து என்னிடம் கூறி அழுதார். அதனால், நான் அந்த வாலிபரை கண்டித்தேன்.

பள்ளி படிப்பு முடிந்து எனது மகள் கல்லூரிக்கு சென்ற பின்பும் வசந்தராஜன் பின்தொடர்ந்து சென்று காதலிப்பதாக கூறிவந்தார். மேலும், திருமணம் செய்வதாகவும் கூறினார். கடந்த வாரம் வசந்தராஜனும், அவரது நண்பரும் எனது வீட்டுக்கு வந்து எனது கணவரிடம் மகளை திருமணம் செய்து தரும்படி கேட்டனர். அதற்கு மறுத்ததால் மகளின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டினார்.

இதனால் மனமுடைந்த எனது மகள், கடந்த 8-ந்தேதி வீட்டின் கழிவறையில் வைத்து விஷம் குடித்து விட்டார். பின்னர், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அதன்பிறகு வசந்தராஜனும், அவரது நண்பரும் தொடர்ந்து எனது மகளிடம் தகராறு செய்து வருகிறார்கள். எனவே வசந்தராஜன் மற்றும் அவரது நண்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அதன்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, கட்டாய திருமணத்துக்கு வற்புறுத்திய வசந்தராஜன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story