அமராவதி அணையில் இருந்து 800 கனஅடி தண்ணீர் திறப்பு - 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்


அமராவதி அணையில் இருந்து 800 கனஅடி தண்ணீர் திறப்பு - 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்
x
தினத்தந்தி 12 Dec 2018 11:30 PM GMT (Updated: 12 Dec 2018 9:38 PM GMT)

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் திருப்பூர், கரூர் மாவட்ட 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.

தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை நீராதாரமாக கொண்ட இந்த அணைக்கு ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழை காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அதை அடிப்படையாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அத்துடன்் சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் நடப்பாண்டில் மேற்கு தொடர்்ச்சி மலைகளில் உள்ள அமராவதி அணையின் நீராதாரங்களில் பருவமழை குறிப்பிட்ட இடைவெளியில் பெய்து வந்தது. இதன் காரணமாக அங்குள்ள பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் ஓடைகளில் தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் அமராவதி அணையின் நீர்்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதையடுத்து அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதைத்தொடர்ந்து அதை நம்பி உள்ள பாசன பகுதி விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அணைக்கு ஆறுகள் மூலமாக தொடர்ந்து நீர்வரத்து இருந்து வந்ததால் அணையின் நீர்் இருப்பும் கடந்த சில மாதங்களாக 80 அடிக்கும் குறையாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் கஜா புயலின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்்வரத்து ஏற்பட்டு அதன் முழுகொள்ளளவை எட்டும் நிலையை அடைந்தது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அணையில் இருந்து உபரிநீர் திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் தற்போது அப்பகுதியில் மழை பெய்யாததால் ஆறுகள் மூலமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்்வரத்து படிப்படியாக குறைந்து விட்டது. கடந்த சில நாட்களாக அமராவதி அணையின் பாசன பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்த சூழலில் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்து மற்றும் நீர்இருப்பினை பொறுத்து குறிப்பிட்ட இடைவெளிவிட்டு அணையில் இருந்து நேற்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வருகின்ற ஜனவரி மாதம் 31-தேதி வரை திறந்து விடப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 86.65 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 218 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு அமராவதி ஆற்றுக்கு 400 கனஅடியும், பிரதான கால்வாயில் 400 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது. இதனால் அமராவதி அணையை நம்பி உள்ள 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.

இதன் காரணமாக திருப்பூர் மற்றும் கருர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Next Story