திருப்பத்தூரில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர் பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்


திருப்பத்தூரில் பெண்ணிடம் நகையை பறித்த வாலிபர் பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்
x
தினத்தந்தி 12 Dec 2018 10:15 PM GMT (Updated: 12 Dec 2018 9:55 PM GMT)

திருப்பத்தூரில் பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற வாலிபரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே புதுப்பட்டியைச்சேர்ந்தவர் சிவராஜன். இவர் திருப்பத்தூர் டவுன் சர்வேயராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜீவிதா(வயது24). இவர் தனது 4 வயது குழந்தையுடன் திருப்பத்தூருக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிஉள்ளார். அப்போது புதுக்கோட்டை ரோட்டில் தனியார் மருத்துவமனை அருகில் செல்லும்போது, இவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் ஜீவிதா அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றனர். அப்போது சங்கிலியான் கோவில் அருகே சாலைப்பணிககாக தோண்டப்பட்டடிருந்த பள்ளத்தில் 2 பேரும் தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.

இவர்களை பின்தொடர்ந்து ஜீவிதா சென்றுள்ளார். இதைப்பார்த்த திருடர்கள் மோட்டார் சைக்கிளை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் ஓடிவிட்டனர். பின்னர் இதுப்பற்றி தகவல் அறிந்து வந்த அப்பகுதியினர் அவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது 2 மணி நேரம் போராடி ஒருவரை பிடித்துவிட்டனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிப்பட்டவரை அங்கு வந்த திருப்பத்தூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட வாலிபரிடம் போலீசார் விசாரித்த போது, மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகே வலையங்குளம் பகுதியைச்சேர்ந்த வீரணன் மகன் தமிழ்ச்செல்வன்(24) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொரு நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அவர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story