தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர்களுடன் சென்னை சென்றார்


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர்களுடன் சென்னை சென்றார்
x
தினத்தந்தி 13 Dec 2018 11:15 PM GMT (Updated: 13 Dec 2018 7:15 PM GMT)

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் சென்னை புறப்பட்டு சென்றார். சசிகலா, தினகரன் ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டதால் பர பரப்பு ஏற்பட்டது.

கரூர்,

கரூரை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் செந்தில்பாலாஜி (வயது43). கல்லூரி படிப்பை முடித்ததும் தனது இளம் வயதிலேயே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்த இவர், படிப்படியாக முன்னேறி 2006 மற்றும் 2011-ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் கரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்த இவர், அப்போது போக்குவரத்து துறைக்கு அமைச்சரானார். அதன் பின்னர் 2016-ல் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவான இவர், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தினால் டி.டி.வி.தினகரனுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் சேர்ந்தார். அக்கட்சியில் அவருக்கு மாநில அமைப்பு செயலாளர் பதவி மட்டுமின்றி மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.

பின்னர் ஐகோர்ட்டு உத்தரவினால் செந்தில்பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏக்களும் தங்களது பதவியை சமீபத்தில் இழந்தனர். இந்த நிலையில் ஐகோர்ட்டு தீர்ப்பினை ஏற்று அப்பீலுக்கு செல்வது உள்ளிட்ட அவரது முடிவுக்கு அ.ம.மு.க.வின் டி.டி.வி.தினகரன் செவிசாய்க்காமல் இருந்தார். மேலும் அ.தி.மு.க.-அ.ம.மு.க. உடன்பாடு ஏற்படபோவதாகவும் பேசப்பட்டது.

கரூரில் அ.தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான தம்பிதுரைக்கு எதிராகவே அரசியல் செய்து வந்த செந்தில்பாலாஜிக்கு திடீரென அவர்களுடன் இணையவும் விருப்பமில்லை. மேலும் கொங்கு மண்டலத்தில் சறுக்கலை சந்தித்து வரும் தி.மு.க.வுக்கும் ஒரு உத்வேகம் தேவைப்படுகிறது. அந்த வகையில் தனது நிலைப்பாட்டை மாற்றி ஒரு வாரத்திற்கு முன்பு சென்னைக்கு சென்று மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிவிட்டு வந்தார்.

இதனால் அவர் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் சேருவது உறுதியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் ரெங்கசாமி, அரூர் முருகன், சோளிங்கர் பார்த்திபன் உள்ளிட்டோர் வந்து செந்தில்பாலாஜியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். எனினும் அது பலன் அளிக்கவில்லை. இதற்கிடையே தனது ஆதரவாளர்களிடம் கருத்து கேட்டு தி.மு.க.வில் தன்னுடன் வருவதற்கான ஏற்பாடுகளையும் செந்தில்பாலாஜி படுஜோராக மேற்கொண்டார். பெரும்பாலான நிர்வாகிகள், உறுப்பினர்கள் அவருடன் செல்வதால் கரூரில் அ.ம.மு.க.வின் கூடாரம் காலியாகும் நிலைக்கு வந்து விட்டது. அதிலும் சிலர் அ.தி.மு.க.வில் போய் சேர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் இனிமேல் கரூரில் அ.ம.மு.க.வை தவிர்த்து அ.தி.மு.க.-தி.மு.க. என்கிற இருமுனை போட்டிதான் தேர்தலில் நிலவும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை முதலே கரூர் ராமகிருஷ்ணபுரத்திலுள்ள செந்தில்பாலாஜியின் அலுவலகத்தில் அவரது ஆதரவாளர்கள் திரண்டு ஆலோசனை நடத்தினர். பின்னர் கரூர் வெங்ககல்பட்டி, வேலாயுதம்பாளையம், தோகைமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து அவரது ஆதரவாளர்கள் கார், வேன், மினிபஸ் உள்ளிட்டவற்றில் செல்ல தயாராக இருந்தனர்.

அப்போது காரில் ஏற்கனவே ஒட்டியிருந்த சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரின் ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை கிழித்து எறிந்தனர். இன்னும் சிலர் தனது சட்டைபையில் வைத்திருந்த டி.டி.வி.தினகரன், சசிகலா புகைப்படம் உள்ளிட்டவற்றையும் தூக்கி வீசினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்கள் கூறுகையில், நாளை (அதாவது இன்று) காலை எங்களது அண்ணன் செந்தில்பாலாஜியுடன் சேர்ந்து சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளோம். அப்போது எங்களது அரசியல் நிலைப்பாட்டை எடுத்து கூறுவோம். நாங்கள் தி.மு.க.வில் இணையும் வகையிலான பிரமாண்ட விழா கரூரில் ஏற்பாடு செய்யப்படும். அதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுவார். கரூரை பொறுத்தவரையில் தி.மு.க.வின் இளைய தலைமுறையினரிடம் செந்தில்பாலாஜிக்கு அமோக வரவேற்பு உள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையே கரூரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற செந்தில்பாலாஜி, தனது ஆதரவாளர்களை அழைத்து கொண்டு நேற்று மதியத்திற்கு மேல் வாகனங்களில் சென்னைக்கு புறப்பட்டார். அவர்கள் சென்னையிலுள்ள ஓட்டலில் தங்கி விட்டு, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணிக்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகின்றனர். அப்போது செந்தில்பாலாஜிக்கு தி.மு.க.வில் வழங்கப்பட உள்ள முக்கிய பொறுப்பு உள்ளிட்டவை குறித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த சந்திப்புக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் கரூர் திரும்புகின்றனர்.

கருணாநிதியின் சிலை திறப்பு விழா முடிந்த பிறகு, கரூரில் நடைபெறவுள்ள செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் இணைப்பு விழா தி.மு.க.விற்கு வலிமை சேர்க்கும் விதமாக இருக்கும் என தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் சிலர் தெரிவித்தனர். அதே சமயம், கரூரில் அ.தி.மு.க.விலும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையின்கீழ் தொண்டர்கள் பட்டாளம் தேர்தல் பணியில் தீவிரமாக இறங்கி விட்டனர். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தல் ஆனாலும், அரவக் குறிச்சி இடைதேர்தல் ஆனாலும் அ.தி.மு.க-தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story