கோத்தகிரி அருகே: தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி


கோத்தகிரி அருகே: தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி
x
தினத்தந்தி 13 Dec 2018 10:30 PM GMT (Updated: 13 Dec 2018 7:17 PM GMT)

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி இறந்து கிடந்தது.

கோத்தகிரி, 

கோத்தகிரி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட கீழ்கோத்தகிரி அருகே பொம்மன் எஸ்டேட் உள்ளது. இங்கிருந்து மெட்டுக்கல் கிராமத்துக்கு செல்லும் சாலையில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி இறந்து கிடப்பதாக நேற்று காலை தொழிலாளர்கள் எஸ்டேட் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர்.

இதுபற்றி கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு இறந்து கிடந்த சிறுத்தைப்புலியின் உடலை பார்த்தனர்.

பின்னர் கோத்தகிரி கால்நடை மருத்துவர் ராஜன் சிறுத்தைப்புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பிரேத பரிசோதனையில் நுரையீரலில் நோய் தாக்கி சிறுத்தைப்புலி உயிரிழந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின் சிறுத்தைப்புலியின் உடல் அதே பகுதியில் தீ வைத்து எரிக்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, இறந்து கிடந்தது சுமார் 4 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தைப்புலி ஆகும். பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் உடற்கூறுகள் கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆய்வு முடிவுகள் வந்த பிறகே சிறுத்தைப்புலி இறந்ததற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று தெரிவித்தனர்.

Next Story