மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட எதிர்ப்பு; அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆவேசம்


மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட எதிர்ப்பு; அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆவேசம்
x
தினத்தந்தி 15 Dec 2018 12:17 AM GMT (Updated: 15 Dec 2018 12:17 AM GMT)

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆவேசமாக பேசினர்.

புதுச்சேரி,

மேகதாதுவில் அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்ததை திரும்பப்பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டம் நேற்று நடந்தது. அப்போது அரசின் தீர்மானத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தின் மீது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

அமைச்சர் நமச்சிவாயம்: கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தாலும் நாம் நமது மாநில உரிமையை விட்டுக்கொடுக்கவில்லை. காவிரியில் நமது உரிமையை பெற தொடர்ந்து போராடி 7 டி.எம்.சி. தண்ணீரை பெற்றோம். காவிரியின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளை மேற்கொண்டாலும் காவிரி பாயும் மாநிலங்களிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு இருக்கையில் மேகதாது திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு எப்படி அனுமதி அளித்தது? இங்குள்ள பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் மத்திய மந்திரிகளை சந்தித்து தடையில்லா சான்றிதழை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அமைச்சர் கமலக்கண்ணன்: மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக காவிரி ஆணைய கூட்டத்தில் நமது அரசின் வளர்ச்சி ஆணையர் கலந்துகொண்டு எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். தங்கள் மாநில மக்களுக்காக குரல் கொடுப்பது அந்தந்த மாநிலத்தவர்களின் உரிமை. மேகதாது அணை தொடர்பான அறிவிப்பு வந்ததும் நமது முதல்-அமைச்சர் நாராயணசாமி அதைக்கண்டித்து போராட்டம் நடத்தி தனது எதிர்ப்பினை பதிவு செய்தார். சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான கோப்புகளை கவர்னர் மக்களை மதிக்காமல் மறுத்தால் அதற்குரிய பதிலை மக்கள் அளிப்பார்கள். அப்போது சிலரது வேஷம் வெளியாகும்.

அன்பழகன் (அ.தி.மு.க.): கர்நாடகத்தில் ஆட்சிசெய்யும் காங்கிரஸ் ஆட்சியை கருத்தில்கொண்டு புதுவை காங்கிரஸ் அரசு இப்பிரச்சினையில் மெத்தனப்போக்கை கடை பிடித்து வருகிறது. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினை அமல்படுத்தாத மத்திய அரசின் மீது நீதிமன்ற அவ மதிப்பு வழக்கினை தமிழகம் தொடுத்தபோது புதுச்சேரி அரசு அந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. 2 தினங்களுக்கு முன்பு அணைகட்ட தடையுத்தரவு வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளது.

சுப்ரீம்கோர்ட்டு வழக்கிற்கு முன்பே நாமும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் நம் தரப்பு வாதத்துக்கு வலுசேர்த்ததாக இருந்திருக்கும். காவிரி பிரச்சினைகளில் அரசியல் ரீதியில் பார்க்காமல் காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினையாக கருத்தில்கொண்டு தமிழகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் புதுவை அரசும் துணையாக இருக்கவேண்டும். மத்திய நீர் ஆணையத்தின் தலைவராக இருக்கும் மசூத் உசைன், காவிரி நீர் மேலாண்மை வாரியத்திற்கும் தலைவராக இருப்பதால் ஒருதலைபட்சமாக செயல்படு கிறார். எனவே அவரை நீக்கிவிட்டு காவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தர தலைவரை மத்திய அரசு நியமிக்கவேண்டும்.

சிவா (தி.மு.க.): காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். 52 எம்.பி.க்களும் ஒன்றாக சென்று பிரதமரை சந்தித்து ஒரே குரலில் வலியுறுத்தினார்கள். தற்போது மேகதாதுவில் அணை கட்டுவது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது மிகப்பெரிய துரோகம்.

கர்நாடகம் தண்ணீர் தராததால் தமிழகம், புதுச்சேரி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கஜா புயலால் காவிரி டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அணைகட்ட அனுமதி அளிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

அனந்தராமன் (காங்): கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தாலும் புதுவை அரசு நமது மாநில மக்களுக்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கொடுத்ததற்கு சுப்ரீம்கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.

எம்.என்.ஆர்.பாலன் (காங்): கர்நாடக மாநிலத்தில் அவர்கள் மாநில உரிமையை கேட்கிறார்கள். அது தவறு என்று நாம்தான் அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை மதிக்காமல் பாரதீய ஜனதா அரசுதான் உள்ளது.

சங்கர் (பா.ஜனதா): புதுவை அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை. இதற்கு தீர்மானம் மட்டுமே முடிவாக இருக்காது. முதலில் பேச்சுவார்த்தை நடத்துங்கள். கர்நாடகாவில் ஆட்சியில் இருப்பவர்களும், நீங்களும் அண்ணன், தம்பி கட்சிகள்தானே. பேச்சுவார்த்தைக்கு அவர்களும் தயாராக உள்ளனர். அவர்களை மனுவை திரும்பப்பெற சொல்லுங்கள். அங்கு இருப்பதும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதானே.

சாமிநாதன் (பா.ஜனதா): மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆனால் இந்த திட்டத்தை கொண்டுவந்ததே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர்தான்.

செல்வகணபதி (பா.ஜனதா): நாங்கள் தீர்மானத்துக்கு எதிராக இல்லை. ஆதரிக்கிறோம்.

இவ்வாறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

Next Story