மேகதாது பிரச்சினையில் தி.மு.க., காங்கிரஸ் அரசியல் செய்யக்கூடாது சேலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


மேகதாது பிரச்சினையில் தி.மு.க., காங்கிரஸ் அரசியல் செய்யக்கூடாது சேலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 15 Dec 2018 10:45 PM GMT (Updated: 15 Dec 2018 4:06 PM GMT)

‘மேகதாது பிரச்சினையில் தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அரசியல் செய்யக்கூடாது’ என்று சேலத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஓமலூர், 


சேலம் விமான நிலையத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பா.ஜனதா கட்சி தொண்டர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடுவது கட்சியினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. சற்று பின்னடைவை சந்தித்திருந்தாலும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அந்த 5 மாநிலங்களிலும் பா.ஜ.க. அதிகளவில் வெற்றி பெறும்.

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை மத்திய அரசின் நடவடிக்கையால் தற்போது 10 ரூபாய்க்கு மேல் விலை குறைந்துள்ளது. கடந்த கால ஆட்சிகளில் இதுபோன்று பெரிய அளவில் விலையை குறைத்தது இல்லை. மாற்று எரிசக்தியை பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது.

பேட்டரி கார் தயாரிப்பு, 5 இடங்களில் எத்தனால் தொழிற்சாலைகள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது பெட்ரோல், டீசல் விலை பெருமளவு குறையும். கஜா புயல் பாதிப்பு குறித்து அறிந்ததும் பிரதமர் மோடி உடனடியாக மத்திய குழுவை அனுப்பியதுடன் மின் பாதிப்புகளை சரி செய்ய ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்தார். தற்போது 3 லட்சம் லிட்டர் மண்எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. கஜா பாதிப்பில் அரசியல் செய்யாமல் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு.

மேகதாது பிரச்சினையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் அரசியல் செய்யக்கூடாது. அதாவது அவர்கள் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்து மேகதாது திட்டத்தால், தமிழகம் பாதிக்கப்படும் எனக்கூற வேண்டும். சோனியாகாந்தி, ராகுல்காந்தியை சந்தித்தபோது மேகதாது பிரச்சினை குறித்து பேசியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதற்கு அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்பது குறித்து மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும். தி.மு.க.வில் செந்தில்பாலாஜி சேர்ந்தது சந்தர்ப்பவாதம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, மாவட்ட தலைவர் சவுந்தர்ராஜன், மாவட்ட பொருளாளர் ரவி உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story