மேட்டூர் அருகே மொபட்-லாரி மோதல்; விவசாயி பலி உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்று திரும்பியபோது சோகம்


மேட்டூர் அருகே மொபட்-லாரி மோதல்; விவசாயி பலி உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்று திரும்பியபோது சோகம்
x
தினத்தந்தி 15 Dec 2018 10:15 PM GMT (Updated: 15 Dec 2018 4:13 PM GMT)

மேட்டூர் அருகே, உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்று விட்டு திரும்பியபோது மொபட்டும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார்.

மேட்டூர், 

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த பொறையூர் காட்டுவளவை சேர்ந்தவர் மாதையன் (வயது 50), விவசாயி. இவரும், இவருடைய நண்பர் வீரகனூர் பகுதியை சேர்ந்த இன்னொரு மாதையன் என்பவரும் நேற்று முன்தினம் ஒரு மொபட்டில் மேட்டூர் காவிரி ஆற்றில் நடைபெற்ற உறவினர் ஒருவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். பின்னர் மீண்டும் மொபட்டில் ஊருக்கு திரும்பினர்.

அப்போது மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் இவர்களது மொபட் சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் இவர்களை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பொறையூர் காட்டுவளவை சேர்ந்த விவசாயி மாதையன் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்து போனார். இன்னொரு மாதையனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் துரைசாமி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story