தரக்குறைவாக பேசிய முதல்வரை கண்டித்து அரசு கல்லூரி மாணவிகள் போராட்டம் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பினர்


தரக்குறைவாக பேசிய முதல்வரை கண்டித்து அரசு கல்லூரி மாணவிகள் போராட்டம் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பினர்
x
தினத்தந்தி 15 Dec 2018 10:45 PM GMT (Updated: 15 Dec 2018 8:11 PM GMT)

தரக்குறைவாக பேசிய முதல்வரை கண்டித்து தஞ்சையில் அரசு கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்தினர். மேலும் கலெக்டருக்கு புகார் மனுவும் அனுப்பினர்.

தஞ்சாவூர்,

தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் பெற்றோர்-ஆசிரியர் கழக கட்டணமாக 3 ஆண்டுகளில் ரூ.1,100 வரை வசூலிக்கப்படுவதையும், முன்னாள் மாணவர் சங்க கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படுவதை கண்டித்தும், இக்கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடந்த 13-ந் தேதி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கல்லூரி முதல்வர் திருவள்ளுவர், மாணவிகளை சந்தித்து பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதி அளித்தார். இதை ஏற்று மாணவிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கல்லூரியில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

அதில் பங்கேற்ற மாணவிகள் சங்க நிர்வாகிகள், சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கல்லூரி முதல்வர், மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதை கண்டித்தும், முதல்வரை மாற்ற வேண்டும். பெண் முதல்வரை நியமிக்க வேண்டும். பெற்றோர்-ஆசிரியர் கழக கட்டணம், முன்னாள் மாணவர் சங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே வசூல் செய்த கட்டணத்தை திரும்ப செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுகாலை மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.

பின்னர் கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் அதற்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதனால் மாணவிகள் அனைவரும் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறி, கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாணவிகள் சங்க செயலாளர் சோபியா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கீர்த்தனா முன்னிலை வகித்தார். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் சண்முகபிரியா மற்றும் நிர்வாகிகள் சிலர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதில் பங்கேற்றவர்கள், மாணவிகளை தரக்குறைவாக நடத்தாதே, கண்ணியத்தை காப்பாற்று என்பன போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதை அறிந்த போலீசார், மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் நேரில் வந்தால் தான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என மாணவிகள் தெரிவித்தனர். இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவிசேகர், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், தஞ்சை தாசில்தார் அருணகிரி ஆகியோர் கல்லூரிக்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாணவிகளின் கருத்துக்களை கேட்டறிந்த அவர்கள், மாணவிகளை தரக்குறைவாக பேசிய முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை எழுதி கொடுங்கள். அந்த மனுவை கலெக்டருக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக கூறினர். மேலும் நாளை (திங்கட்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாணவிகள் சங்க நிர்வாகிகள் சிலர் பங்கேற்று கலெக்டரிடம் நேரில் மனு அளிக்கலாம். அதன்பேரில் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும் உறுதி அளித்தனர்.

இதை ஏற்று மாணவிகள், புகார் மனு எழுதி, துணை போலீஸ் சூப்பிரண்டு மூலம் அந்த மனுவை கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டம் 3 மணிநேரம் நடைபெற்றது. பின்னர் மாணவிகள் அனைவரும் வீட்டிற்கு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தையொட்டி 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Next Story