திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சீர்வரிசை வழங்கினார்


திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சீர்வரிசை வழங்கினார்
x
தினத்தந்தி 15 Dec 2018 10:30 PM GMT (Updated: 15 Dec 2018 9:39 PM GMT)

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சீர்வரிசை வழங்கினார்.

ஸ்ரீரங்கம்,

திருச்சி மாவட்டம் சமய புரம் மாரியம்மன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு தங்கை என்ற முறையில் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஸ்ரீரங்கம் கோவில் சீர்வரிசைகள் சமயபுரம் மாரியம்மனுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. இதேபோல் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரியும் ரெங்கநாதரின் மற்றொரு தங்கையாக கருதப்பட்டு, அக்கோவிலில் மார்கழி முதல் நாள் நடைபெறும் திருப்பாவாடைக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கியதற்கான சான்றுகள் சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைக்கப்பெற்றன. அதன் அடிப்படையில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு நின்று போன இவ்வழக்கத்தை புதுப்பித்து, நடைமுறைக்கு கொண்டு வர இரு கோவில் நிர்வாகங்களும் முடிவு செய்தன.

இதையடுத்து மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று அகிலாண்டேஸ்வரிக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து சீர்வரிசை பொருட்களை யானை மீது வைத்து, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர், அலுவலர்கள், ஊழியர்களும் திருவானைக்காவல் கோவிலுக்கு நேற்று மாலை எடுத்து வந்தனர்.

இதில் புதிய வஸ்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மாலைகள், தாம்பூலம், மங்கல பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

திருவானைக்காவல் உதவி ஆணையர் ஜெயப்பிரியா மற்றும் கோவில் பண்டிதர்கள் கோவில் கொடிமரம் முன்பு சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்டனர். இதில் உள்ள உணவுப்பொருட் களைக் கொண்டு தயாரிக்கப்படும் நிவேதனத்துடன் இன்று (மார்கழி முதல்நாள்) காலை பூஜைகள் நடைபெறும்.

முதல் பூஜையின் போது சுவாமி மற்றும் அம்பாளுக்கு ரெங்கநாதர் கோவில் வஸ்திரங்கள் சாற்றப்பட்டு பதினாறு வகை உபசாரங்களுடன் மகாதீபாராதனை நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Next Story