திருமணமான 20 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை


திருமணமான 20 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
x
தினத்தந்தி 15 Dec 2018 10:48 PM GMT (Updated: 15 Dec 2018 10:48 PM GMT)

திருமணமான 20 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

வெள்ளகோவில்,

முத்தூர் அருகே திருமணமான 20 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் முத்தூரை அடுத்த செங்கோடம்பாளையம், கல்லேரியைச் சேர்ந்தவர் சேனாபதி (வயது 55). இவருடைய மனைவி லட்சுமி (45). இவர்களது மகன் குமார் (24). இவரும் இவரது தந்தை சேனாபதியும் தேங்காய் பறிக்கும் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். குமாருக்கும் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியில் உள்ள குமாரசாமி தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் சரோஜாதேவிக்கும் (19) பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு கடந்த மாதம் 25-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் கணவர் குமாரும், மாமனார் சேனாபதியும் வேலைக்கு சென்றுவிட்டனர். மாமியார் லட்சுமி பக்கத்து வீட்டிற்கு சென்று இருந்தார்.

இதனால் வீட்டில் தனியாக இருந்த சரோஜாதேவி வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிறிது நேரம் கழித்து லட்சுமி வந்து பார்த்தபோது சரோஜாதேவி விட்டத்தில் தூக்கில் தொங்குவதை பார்த்து அலறினார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து இறக்கி பார்த்தபோது சரோஜாதேவி இறந்து இருப்பது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வெள்ளகோவில் போலீசார் சரோஜாதேவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரோஜாதேவி தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட சரோஜாதேவிக்கு திருமணமாகி 20 நாட்களே ஆவதால் காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி, தாராபுரம் ஆர்.டி.ஓ. கிரேஸ் பச்சாவு ஆகியோர் சரோஜாதேவி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 3 வாரங்களில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story