நடிகர் துல்கர் சல்மான் குறித்த டுவிட்டர் பதிவால் சர்ச்சை : மும்பை போலீசார் மன்னிப்பு கோர ரசிகர்கள் வலியுறுத்தல்


நடிகர் துல்கர் சல்மான் குறித்த டுவிட்டர் பதிவால் சர்ச்சை : மும்பை போலீசார் மன்னிப்பு கோர ரசிகர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Dec 2018 12:23 AM GMT (Updated: 16 Dec 2018 12:23 AM GMT)

நடிகர் துல்கர் சல்மான் குறித்து சர்ச்சையான டுவிட்டர் பதிவு வெளியிட்ட மும்பை போலீசார் மன்னிப்பு கோரவேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மும்பை,

தமிழில் ‘ஓ காதல் கண்மணி' உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் துல்கர் சல்மான்.

நடிகை சோனம் கபூர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இவரை குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் நடிகர் துல்கர் சல்மான் கார் ஓட்டியபடியே சாலையை கண்டுகொள்ளாமல் செல்போனை பயன்படுத்தி கொண்டு இருந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த மும்பை போலீசார் இந்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு, ஒரு நடிகர் இதுபோன்று சாலைவிதிகளை மதிக்காமல் நடந்துகொள்வது தவறு என கூறியிருந்தனர்.

இதற்கு பதில் அளித்த நடிகை சோனம் கபூர், “ அந்த காட்சிகள் சினிமா படத்திற்காக எடுக்கப்பட்டதாகும், காரை நடிகர் துல்கா் சல்மான் ஓட்டவில்லை. அந்த கார் ஒரு லாரியில் எடுத்து செல்லப்பட்டது அதில் தான் அவர் அமர்ந்திருந்தார் ” என விளக்கம் அளித்து இருந்தார்.

இதேபோல் மும்பை போலீசாரின் டுவிட்டர் பதிவுக்கு பதில் அளித்த நடிகர் துல்கர் சல்மான், நாங்கள் போட்ட பதிவு குறித்து விசாரித்து தவறு செய்தது உறுதியானபின் காட்சிகளை டுவிட்டரில் பதிவிட்டிருந்தால் உங்களை பாராட்டி இருக்கலாம் என கூறினார்.

இதையடுத்து உண்மை தெரியாமல் நடிகர் குறித்து விமர்சித்ததற்காக மும்பை போலீசார் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது ரசிகர்கள் பதிவிட தொடங்கினர்.

இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நடிகர் துல்கர் சல்மான், மும்பை போலீசார் அவர்களது பணியை தான் செய்து உள்ளனர். எனவே இந்த பிரச்சினையை தொடர வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.


Next Story