நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு ஜெயலலிதா பெயர் அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்


நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு ஜெயலலிதா பெயர் அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 16 Dec 2018 10:45 PM GMT (Updated: 16 Dec 2018 9:27 PM GMT)

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஜெயலலிதா பெயரை சூட்ட வேண்டும் என்று அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகர அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நகர செயலாளர் சந்துரு என்ற ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். அணி நிர்வாகிகள் ஜெயசீலன், சுகுமாரன், சுந்தரம், பொன்.சுந்தர்நாத், ஜெயகோபால் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

குமரி மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), டி.ஜாண்தங்கம் (மேற்கு), அவைத்தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ.ராஜன், மாவட்ட பொருளாளர் திலக் மற்றும் பலர் வாழ்த்தி பேசினார்கள். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் அ.தி.மு.க. கடந்த 2 ஆண்டுகளாக பின்தங்கி இருந்தது. அதை சரிப்படுத்தும் வகையில்தான் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு, கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. நகர செயலாளர் பதவிக்கு ஜெயச்சந்திரன் தகுதியானவர். நாகர்கோவில் தொகுதியில் உள்ள 275 பூத்துகளில், நாகர்கோவில் நகரில் மட்டும் 212 பூத்துகள் உள்ளன. இவைதான் நாகர்கோவில் தொகுதியின் வெற்றியை நிர்ணயம் செய்யும். எனவே பூத் கமிட்டிகள் அமைத்து நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும். பிரதமர் மோடியைப்போல் காணொளி காட்சி மூலம் அ.தி.மு.க. பூத்கமிட்டி உறுப்பினர்களுடன் கலந்துரையாட முதல்-அமைச்சரை வலியுறுத்தி உள்ளேன்.

கூட்டணி குறித்து நமது கட்சி தலைமை உறுதிப்படுத்தும். நாகர்கோவில் பார்வதிபுரத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மேம்பாலத்தை சிறப்பாக அமைத்துள்ளார். பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி அமைந்தாலும் நாம் அதன் வெற்றிக்காக உழைக்க வேண்டும். கூட்டணி குறித்து நாம் கவலைப்படவேண்டாம்.

இவ்வாறு தளவாய் சுந்தரம் பேசினார்.

கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், நாகர்கோவில் நகர செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு நன்றி தெரிவிப்பது, அனைத்து வார்டுகளிலும் தலா 20 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைப்பது, நகர மக்களின் நீண்டநாள் கோரிக்கையின்படி நாகர்கோவிலில் தமிழக அரசு சார்பில் சட்டக்கல்லூரி மற்றும் வேளாண்மைக்கல்லூரி அமைக்க வலியுறுத்துவது, நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரிக்கு எம்.ஜி.ஆர். பெயரையும், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஜெயலலிதா பெயரையும் வைக்க கோருவது, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைப்பது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகுமார், அழகேசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணதாஸ், நிர்வாகிகள் கோட்டார் கிருஷ்ணன், ஜெகதீஷ், ராஜாராம், சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வின்சென்ட் நன்றி கூறினார்.

Next Story