குப்பைகளை கொட்டி எரிப்பதால் மாசடையும் வைகை ஆறு


குப்பைகளை கொட்டி எரிப்பதால் மாசடையும் வைகை ஆறு
x
தினத்தந்தி 17 Dec 2018 12:22 AM GMT (Updated: 17 Dec 2018 12:22 AM GMT)

நாகமலைபுதுக்கோட்டை அருகே கொடிமங்கலம், துவரிமான் உள்ளிட்ட கிராமங்களில் வைகை ஆற்றில் குப்பைகளை கொட்டி எரிப்பதால் வைகை மாசடைந்து வருகிறது.

நாகமலைபுதுக்கோட்டை,

நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள கொடிமங்கலம் கிராமம், வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள குடியிருப்புகள், கடைகளில் இருந்து குப்பைகளை சேகரிக்கும் ஊராட்சி பணியாளர்கள் அவற்றை தரம் பிரித்து முறையாக அழிப்பதில்லை. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை வைகை ஆற்றின் கரையில் ஆங்காங்கே கொட்டி வைக்கின்றனர். பின்னர் அவற்றை தீவைத்து எரிக்கின்றனர். கொடிமங்கலம் பஸ் நிறுத்தம் எதிரிலும், மயானம் அருகிலும் தினமும் குப்பைகள் எரிக்கப்படுகின்றன.

பாலிதீன் பைகள் உள்ளிட்ட மக்காத குப்பைகளை எரிப்பதால் வெளியேறும் புகையால் இப்பகுதி பொதுமக்களுக்கு சுவாச கோளாறு, அலர்ஜி போன்ற பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. குப்பைகளை கொட்டி எரிப்பதால் பசுமையான வைகை ஆறு, தீயில் கருகி மாசடைந்து வருகிறது.

குப்பைக்கழிவுகள் வைகை ஆற்றுக்குள் பரவுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தூய்மை பாரதம் உள்பட பல்வேறு சுகாதார திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் குப்பைகளை அகற்றுவதில் கொடிமங்கலம் ஊராட்சியின் பொறுப்பின்மை பொதுமக்களை விரக்தியடைய செய்துள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து அவற்றை முறையாக அழிக்க திருப்பரங்குன்றம் ஒன்றியம், கொடிமங்கலம் ஊராட்சி மன்றம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொடிமங்கலம் மட்டுமின்றி அருகில் உள்ள துவரிமான், கோச்சடை உள்ளிட்ட கிராமங்களிலும் சிலர் குப்பைகளை வைகை ஆற்றில் கொட்டி வருகின்றனர். இதனால் வைகை ஆற்றில் குப்பைகளே நிறைந்து காணப்படுகின்றது. எனவே வைகை ஆற்றில் குப்பைகள் கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ஆற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story