ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் சங்க மாநாடு


ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் சங்க மாநாடு
x
தினத்தந்தி 17 Dec 2018 12:47 AM GMT (Updated: 17 Dec 2018 12:47 AM GMT)

காளையார்கோவிலில் ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் சங்க மாநாடு நடைபெற்றது.

காளையார்கோவில்,

தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல் துறை அலுவலர்கள் நலச்சங்க 4-வது மாநில மாநாடு, ஓய்வூதியர் உரிமை தின விழா மற்றும் சிவகங்கை மாவட்ட சங்க 9-ம்ஆண்டு விழா காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் சுடர் முருகையா தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் ராமநாதன் வரவேற்றார். மாநில செய்தி தொடர்பு செயலாளர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.

மாநில பொதுச்செயலாளர் கார்மேகம் ஆண்டறிக்கை வாசித்தார். மாநாட்டில் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குனர் ரவி மற்றும் காவல்துறை தென் மண்டல தலைவர் சண்முக ராஜேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், புனித மைக்கேல் கல்வி குழுமங்களின் தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி அசோக் குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நிகழ்ச்சியில் காவல்துறை கூடுதல் இயக்குனர் ரவி பேசியதாவது:- தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் நலச்சங்கம் என்பதை முன்னாள் காவல்துறை நலச்சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யலாம். நீங்கள் ஓய்வு பெற்றாலும் நாங்கள் உங்களை காவல்துறையின் ஓர் அங்கமாகவே கருதுகின்றோம். நவீன தொழில்நுட்பம் இல்லாத காலக்கட்டத்தில் உங்களது சேவையை நாங்கள் மனதார நினைவு கூறுகின்றோம். நீங்கள் ஓய்வு பெற்றாலும் உங்கள் அனுபவங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு வழங்கலாம்.

ஓய்வு பெற்றபின் ஏதாவது ஒரு வேலை அல்லது தொழிலில் ஈடுபட்டு மனதையும், உடலையும் புத்துணர்வாக வைத்துக் கொள்ளலாம். பணி நிறைவு பெற்றபின் வரவேண்டிய பணப்பலன் உள்ளிட்ட உங்கள் குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய உறுதுணையாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர், காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தொடர் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளையும், அதிக அளவில் குண்டர் தடுப்பு சட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்ததற்காக இன்ஸ்பெக்டர் மோகனை பாராட்டி, காவல்துறை கூடுதல் இயக்குனர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். முடிவில் சிவகங்கை மாவட்ட சங்க செயலாளர் முத்துசாமி நன்றி கூறினார். இந்த மாநாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Next Story