அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை


அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 17 Dec 2018 11:15 PM GMT (Updated: 17 Dec 2018 6:50 PM GMT)

அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை வழக்கில் பட்டதாரி வாலிபர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சாவூர்,

நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா முஸ்டக்குடி கிராமம் மாதா கோவில் தெருவில் வசித்து வந்தவர் தட்சிணாமூர்த்தி(வயது 42). அ.தி.மு.க. வார்டு கவுன்சிலராக பொறுப்பு வகித்தார். இவர் வாரந்தோறும் தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் உள்ள சரபேஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். வழக்கம்போல் இவர் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி கோவிலுக்கு வந்தார்.

அங்கு தனது அக்கா மகளான கும்பகோணம் செக்காங்கன்னியை சேர்ந்த அமுதாவும் வந்திருந்ததை பார்த்தார். இருவரும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அமுதாவை அவரது வீட்டில் விடுவதற்காக தட்சிணாமூர்த்தி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். கும்பகோணம் காந்தி நகர் சந்திப்பு அருகே சென்றபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், திடீரென அமுதாவை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளியதுடன் தட்சிணாமூர்த்தி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீதும் மோதினர்.

இதனால் நிலைகுலைந்த தட்சிணாமூர்த்தியின் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து 2 பேரும் தப்பிச்சென்று விட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். அமுதா காயம் அடைந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் தட்சிணாமூர்த்தியை, திருவாரூர் மாவட்டம் வடமட்டம் பரவாக்கரை நடுத்தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் அய்யப்பன்(27), தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் வடக்கு தெருவை சேர்ந்த முருகு சீனிவாசன் மகன் சபரி என்கிற சண்முகம் (27) ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது.

முஸ்டக்குடியை சேர்ந்த ஆசிர்வாதம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியை சேர்ந்த மோகன், முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பரோலில் வெளியே வந்த மோகனை, அரிவாளை வைத்து கொண்டு மிரட்டுவதாக எரவாஞ்சேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தன்னை பற்றி தட்சிணாமூர்த்தி தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருப்பதாக தனது உறவினர் அய்யப்பனிடம், மோகன் கூறினார்.

இதனைத்தொடர்ந்து 7 மாதங்களாக தட்சிணாமூர்த்தியை, அய்யப்பன் மிரட்டி வந்தார். இது தொடர்பாக பாலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இப்படி இவர்களுக்குள் முன்விரோதம் காரணமாக பிரச்சினை பெரிதாகிக்கொண்டே வந்தது. இந்த நிலையில் தனது நண்பர் சபரியுடன் சேர்ந்து தட்சிணாமூர்த்தியை கொலை செய்ய அய்யப்பன் திட்டமிட்டார். அதன்படி இந்த கொலை அரங்கேற்றப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து அய்யப்பன், சபரி ஆகியோரை போலீசார் கைது செய்து தஞ்சை முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நீதிபதி பூர்ணஜெய ஆனந்த் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அய்யப்பன், சபரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

தண்டனை பெற்ற அய்யப்பன், எம்.பி.ஏ. படித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சதீஷ்குமார் ஆஜராகி வாதாடினார்.

Next Story