கஜா புயல் நிவாரணத்திற்காக அமெரிக்காவில் நடந்த மொய்விருந்தில் ரூ.14¼ லட்சம் வசூல்


கஜா புயல் நிவாரணத்திற்காக அமெரிக்காவில் நடந்த மொய்விருந்தில் ரூ.14¼ லட்சம் வசூல்
x
தினத்தந்தி 17 Dec 2018 11:00 PM GMT (Updated: 17 Dec 2018 8:38 PM GMT)

கஜா புயல் நிவாரணத்திற்காக அமெரிக்காவில் நடந்த மொய்விருந்தில் ரூ.14¼ லட்சம் வசூலானது.

கீரமங்கலம்,

தமிழக மக்கள் எந்தவகையில் பாதிக்கப்பட்டாலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, அதற்கு ஆதரவு தெரிவித்து வெளிநாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த வாரம் அமெரிக்க வடக்கு கரோலினா நகரில் தமிழகத்தை சேர்ந்த வாகை மகளிர் குழுவினர் மொய்விருந்து நடத்திஇந்திய மதிப்பில் ரூ.3லட்சம் வசூல் செய்தனர். இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், அணவயல், செரியலூர் உள்ளிட்ட கிராமங்களில் சோலார் தெருவிளக்குகள் பொருத்த திட்டமிட்டுள்ளனர். இதேபோல் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்க டாலஸ் நகரில் தமிழர்கள் இணைந்து மொய்விருந்து நடத்தி ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் வசூல் செய்தனர்.

இந்தநிலையில் விவசாயிகளின் தோட்டங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றவும், அந்த நிலங்களில் மறுபடியும் தென்னை, பலா, தேக்கு, போன்ற மரக்கன்றுகள் நடவும், விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக நேற்று முன்தினம் அமெரிக்காவில் உள்ள டாலஸ் நகரில் தமிழ் மலரும் மையம், தமிழ் பள்ளிகள் சார்பில் பிரமாண்டமான மொய்விருந்து நடத்தினர். இதில் 250 தமிழ் குடும்பங்கள் உள்பட இந்திய குடும்பங்களை சேர்ந்த 700 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடப்பது போல தரையில் விரிப்புகள் போட்டு, தலை வாழை இலைகள் வைத்து அறுசுவை உணவுகளை ஏற்பாட்டாளர்களே பரிமாறினர்.

இந்த மொய்விருந்தில் மனநிறைவுடன் சாப்பிட்டவர்கள் அருகில் மொய் வாங்கும் இடம் என்று எழுதப்பட்டிருந்த இடத்திற்கு சென்று தங்களால் இயன்றதை மொய்யாக எழுதினார்கள். இதில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் வசூலானது. இதுகுறித்து மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்த ஜெய்நடேசன், கீதா சுரேஷ், பிரவீணா வரதராஜன் ஆகியோர் கூறியதாவது:-

கஜா புயலால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தோட்டங்களில் விழுந்துகிடக்கும் மரங்களை வெட்டி அகற்றி மறுநடவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு கொடுத்தவர்கள் மறுவாழ்வுக்கு வழி செய்யவில்லை, இதனால் தான் குறுகிய காலத்தில் கலாசார முறைப்படி உதவிகள் பெற தமிழகத்தில் மொய்விருந்து நடத்துவது போல அமெரிக்காவிலும் நடத்தினோம். முடிந்த அளவு அழைப்புகள் அனுப்பினோம். இதில் பலரும் தங்களது குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டு தாராளமாக மொய் செய்தார்கள். இதில் ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் கிடைத்துள்ளது. இந்த நிதியை தமிழகத்தில் தாலஸ் பவுண்டேசன் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் மூலம் விவசாயிகளை சென்றடைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்களால் ஒரு கிராமத்தை மீட்க முடியும் என்று நம்புகிறோம். அதேபோல் நல்ல சம்பளத்தில் உள்ள ஒவ்வொருவரும் உதவ முன்வந்தால் விரைவில் நம் விவசாயிகளை மீட்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தமிழக கல்வியாளர்கள் சங்கம நிர்வாகி ஆசிரியர் சதீஷ்குமார் கூறும்போது, ‘கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் மொய் விருந்து நடத்தி திரட்டி, அனுப்பும் நிதியை கிராமங்களில் சோலார் விளக்குகள் பொருத்தவும், சாய்ந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றி, மரக்கன்றுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது, நிதி வந்தவுடன் விரைவில் பணிகள் தொடங்கும். இதன்மூலம் சில கிராமங்களை மீட்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார். 

Next Story