கள்ளக்காதலனை நம்பி ஏமாந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை; உடல்கருகிய கைக்குழந்தையும் சாவு


கள்ளக்காதலனை நம்பி ஏமாந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை; உடல்கருகிய கைக்குழந்தையும் சாவு
x
தினத்தந்தி 17 Dec 2018 11:37 PM GMT (Updated: 17 Dec 2018 11:37 PM GMT)

கள்ளக்காதலனை நம்பி ஏமாந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தின் போது உடல் கருகிய 6 மாத கைக்குழந்தையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தது.

மதுரை,

மதுரை செல்லூர் தத்தனேரி பகுதியை சேர்ந்தவர் வீரமணி. அவருடைய மனைவி சித்ரா (வயது 32). இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளான்.

வீரமணியும், சித்ராவும் 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வீரமணி இறந்து விட்டார். இதனால் சித்ரா கட்டிட வேலைக்கு சென்று மகனை வளர்த்து வந்தார்.

கணவரை இழந்த சித்ராவுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரை இழந்துவிட்ட நிலையில், சித்ராவை 2-வதாக திருமணம் செய்துகொள்வதாக கூறி அந்த நபர் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய சித்ரா அந்த நபரின் ஆசைக்கு இணங்கியதால் கர்ப்பம் அடைந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அதன்பின்பு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சித்ரா கேட்டதற்கு, அந்த நபர் மறுத்ததுடன், அவரை சந்திப்பதையும் நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. கள்ளக்காதலனை நம்பி ஏமாந்ததால் சித்ரா மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் சித்ரா அக்கம்பக்கத்தினரின் ஏளன பேச்சுக்கும் ஆளானதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ளும் விபரீத முடிவுக்கு வந்தார். இந்த நிலையில் அவருடைய மூத்த மகன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு சித்ரா தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் பலத்த காயமடைந்து வீட்டிற்குள் உயிருக்கு போராடினார். அப்போது அங்கிருந்த 6 மாத குழந்தையின் மீதும் தீப்பற்றியது. அந்த குழந்தையும் உடல் கருகி துடித்தது.

இருவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சித்ரா இறந்து கிடந்தார். அருகில் 6 மாத குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

உடனே அந்த குழந்தையை மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே குழந்தையும் பரிதாபமாக இறந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் செல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். தற்கொலை செய்துகொண்ட சித்ரா மற்றும் அவருடைய 6 மாத குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story